முக்கிய முடிவை தேமுதிக அறிவிக்கவுள்ள உளுந்தூர்ப்பேட்டை மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி இல்லை!
உளுந்தூர்ப்பேட்டை: லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற முக்கிய முடிவை அறிவிக்கத் திட்டமிட்டுள்ள உளுந்தூர்ப்பேட்டை மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தேமுதிகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சேலத்தில் மாநாடு போட்டுத்தான் அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவை தேமுதிக கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு எடுத்தது. அதேபோல இப்போது லோக்சபா தேர்தல் வருவதால் மறுபடியும் ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார் விஜயகாந்த்.
இந்த மாநாடு உளுந்தூர்ப்பேட்டையில் பிப்ரவரி 2ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக எறஞ்சி என்ற இடத்தில் பந்தல் போட்டு மேடை அமைத்து வருகின்றனர். ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தற்போது காவல்துறையின் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
ஜனவரி 11ம் தேதியே தேமுதிக மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் அனுமதி கோரி மாவட்ட எஸ்.பியிடம் பெட்டிஷன் கொடுத்தனர். ஆனால் இதுவரை அனுமதி தரப்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. இதனால் தேமுதிக தரப்பு டென்ஷனாகியுள்ளது.
இதுகுறித்து வெங்கடேசன் கூறுகையில், மாநாட்டுக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனு அளித்துள்ளோம். ஆனாலும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் எஸ்.பி. மனோகரிடம் கேட்டபோது உள்ளூர் போலீசார் தான் இதுபற்றி முடிவு எடுப்பார்கள். எனவே உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி.யிடம் கேளுங்கள் என்று கூறி விட்டார் என்றார்.
இதனால் தேமுதிக தரப்பு டென்ஷனாக உள்ளது. அனுமதி வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் கோர்ட்டை நாடவும் அவர்கள் தயாராகி வருவதாக தெரிகிறது.