எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாக கூறி ரூ.37 லட்சம் மோசடி: தேமுதிக நிர்வாகி கைது
நாகர்கோவில்: மருத்துவ இடம் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த தேமுதிக செயலாளர் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் சசிகுமார். அவர் கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக உள்ளார். அவர் கடந்த 2012ம் ஆண்டு குமரி மாவட்டம் பாலப்பள்ளம் அருகே உள்ள சூசைபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரிடம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கான இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.37 லட்சம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
செல்லத்துரைக்கு எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான இடம் பெற்று தராததால், வாங்கிய பணத்துக்கு சசிகுமார் செக் கொடுத்தார். அந்த செக் மூலம் பணம் கிடைக்கவில்லை. இதனால் நாகர்கோவில் விரைவு நீதிமன்றத்தில் சசிகுமார் மீது செல்லத்துரை செக் மேசடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி சிவாஜி செல்லையா விசாரித்தார். அப்போது சசிகுமார் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து சசிகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி பிடிவாரண்டு உத்தரவை நீதிபதி பிறப்பித்தார். பின்னர் சிதம்பரம் சபாநாயகர் கோவில் தெருவில் உள்ள மாவட்ட தேமுதிக கட்சி அலுவலகத்தில் இருந்த சசிகுமாரை, சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை அழைத்து வந்து நாகர்கோவில் முதலாவது விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை 21ம் தேதி வரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி சிவாஜி செல்லையா உத்தரவிட்டார். இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தேர்தல் சமயத்தில் இந்த கைது நடந்ததால் தேமுதிகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.