'இரட்டை கொலை' வழக்கில் வெளியே வந்த தேமுதிக நிர்வாகி 'கள்ள துப்பாக்கி'யுடன் மீண்டும் கைது!
மேலூர்: கஞ்சா விற்பனை செய்வது தொடர்பான இரட்டைக் கொலை வழக்கில் வெளியே வந்த தேமுதிகவின் மதுரை வடக்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில்பாண்டி கள்ளத் துப்பாக்கியுடன் மீண்டும் போலீசில் சிக்கியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருவாதவூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் செந்தில்பாண்டி. தற்போது மதுரை வண்டியூரில் வசித்து வருகிறார். அவர் தேமுதிகவின் மதுரை வடக்கு மாவட்ட துணைச் செயலராக இருக்கிறார்.
இரட்டை கொலை வழக்கில் செந்தில் பாண்டி
செந்தில்பாண்டி மீது கொலை, கொலை முயற்சி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கஞ்சா விற்பனை தொடர்பாக வண்டியூரில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் கைதாகி அண்மையில்தான் செந்தில்பாண்டி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
மேலூரில் போலீசிடம் இருந்து தப்ப முயற்சி
மேலூர் பேருந்து நிலையம் அருகே கரிமேட்டைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே ரோந்து சென்ற மேலூர் போலீஸார் சந்தேகத்தின்பேரில் இருவரையும் விசாரித்தனர். ஆனால் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே போலீஸாரைத் தாக்கிவிட்டு இருவரும் தப்பியோட முயற்சித்துள்ளனர்.
நாட்டு துப்பாக்கி சிக்கியது
இதைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அப்போது செந்தில்பாண்டியிடம் நடத்தப்பட்ட சோதனையில் 3 குண்டுகளுடன் கூடிய நாட்டுத் துப்பாக்கி சிக்கியது.
இருவரும் கைது
இதைத் தொடர்ந்து செந்தில்பாண்டி, ராஜ்குமார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து துப்பாக்கி, 3 குண்டுகள், 2 செல்போன், 2 ஏடிஎம் கார்டுகள், ஒரு பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வீடியோ
வீடியோ