59 தொகுதி, கூட்டணி பேரம் எதுவுமே கிடையாது...எல்லாமே வதந்தி- சொல்கிறார் தேமுதிக எம்எல்ஏ சந்திரகுமார்
சென்னை: சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் எந்த முடிவையும் எடுக்கவில்லை; கூட்டணி தொடர்பாக வெளியான அத்தனை செய்திகளும் வதந்தி என்று தேமுதிக எம்.எல்.ஏ. சந்திரகுமார் கூறியுள்ளார்.
திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க உள்ளதாகவும் அக்கட்சிக்கு 59 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் திருக்கோவிலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த் இன்னமும் கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் தேமுதிக எம்.எல்.ஏ. சந்திரகுமார் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழக மக்கள் அனைவரும் எங்கள் தலைவர் கேப்டன் , எங்களுடைய தேமுதிக கட்சியும் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்கின்ற மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.தலைவர் தன்னுடைய முடிவை அறிவிப்பதற்கு முன்பே, ஒரு சிலரால் திட்டமிட்டு பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது. அதை பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் செய்திகளாக வெளியிடுகின்றன.
எல்லாமே வதந்தி
அந்த வதந்திகளில், ஒரு கட்சியுடன் 59 தொகுதிகள் பேசி முடித்துவிட்டதாகவும், மற்றொரு கட்சியுடன் ரகசியமாக பேசிக்கொண்டு இருப்பதாகவும், பலகோடி ரூபாய் பணம் கைமாறி விட்டதாகவும், பேரத்தை அதிகரிக்கவே கேப்டன் அமைதியாக இருக்கிறார் என்றும், கற்பனைக்கே எட்டாத வகையில், பல மாதிரி வதந்திகள் பரப்பப்படுகிறது. ஆனால் இந்த நொடி வரையிலும் எங்கள் தலைவர் யாரிடமும் கூட்டணியைப் பற்றி பேசவே இல்லை என்பதுதான் உண்மை.
விஜயகாந்த் அறிவிப்புதான் உண்மை
தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து எந்த முடிவானாலும் எங்கள் தலைவர் அறிவிப்பது மட்டுமே தேமுதிகவின் உண்மையான நிலைப்பாடாக இருக்கும்.
நல்ல முடிவுதான்..
தேமுதிக என்ற கட்சியை 2005ல் ஆரம்பித்து இத்தனை ஆண்டுகாலம், பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில், இந்த அளவிற்கு கட்சியை வளர்த்தவருக்கு தேமுதிகவை எப்படி கொண்டு செல்லவேண்டும் என்பது தெரியாதா? மக்களின் நலன் கருதி அவர் எடுக்கும் எந்தவொரு தைரியமான முடிவும், நல்ல முடிவாகவே இருக்கும்.
Posted by Lk Sudhish on Saturday, March 5, 2016 |
தமிழக மக்களும் ஏற்பர்
அந்த நல்ல முடிவை தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மட்டுமல்ல, தமிழக மக்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள். எனவே எங்கள் தலைவர் பற்றியும், எங்கள் தேமுதிக கட்சியைப் பற்றியும் வரும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்.
இதை என்னுடைய தாழ்மையான வேண்டுகோளாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு சந்திரகுமார் கூறியுள்ளார்.