கெஞ்சியும், கொஞ்சியும் எதுவுமே நடக்கலையே.. தேமுதிக 'ஜம்ப்' சுந்தரராஜன் கவலை!
இந்தக் கவலையை மதுரை மாநாகராட்சிக் கூட்டத்தின்போது மேயர் ராஜன் செல்லப்பாவிடம் அவர் தெரிவித்தார்.
ராஜன் செல்லப்பா தலைமையில் நேற்று நடந்த மதுரை மாநகராட்சி மன்றக் கூட்டத்தின்போது சுந்தரராஜன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், என் தொகுதியில் சில குறைகள் இருப்பதால், அதை தெரிவிக்க வந்துள்ளேன். அதை, குற்றமாக கருதவேண்டாம்.
கால்வாய் பிரச்னைகள் குறித்து தெரிவிக்கவே, முதல்வர் ஜெயலலிதாவை கடந்த ஆண்டு அக்டோபர் 26ம் தேதி சந்தித்துப் பேசினேன். முதல்வரும் எனது கோரிக்கையை ஏற்று, 250 கோடி ரூபாய் ஒதுக்கினார். ஆனால், பிற தொகுதிகளில் நடக்கும் கால்வாய் பணி, எனது தொகுதியில் உள்ள கிருதுமால், அனுப்பானடி கால்வாய்களில் நடக்கவில்லை.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கொஞ்சியும், கெஞ்சியும் பார்த்துவிட்டேன்; எதுவும் நடக்கவில்லை. என்னால் தொகுதிக்கு செல்ல முடியவில்லை. சாக்கடை பிரச்னை உள்ளது.
கிருதுமால் நதியின் அவலம் குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தனர். ரோடுகளும் மோசமாக உள்ளன. நாயக்கர் புதுத்தெரு அருகே சேதமடைந்த ரோடு, 2 ஆண்டுகளாக சரிசெய்யப்படவில்லை. மக்கள் வருத்தப்படுகின்றனர் என்றார் சுந்தரராஜன்.
தம்பி மகளுக்கு டெங்கு வந்திருச்சு
இதற்குப் பதிலளித்த உதவிப் பொறியாளர் சேகரன், சம்பந்தப்பட்ட தொகுதியில் பணி நடக்கிறது என்று ஆரம்பித்தார். இதையடுத்து குறுக்கிட்ட சுந்தரராஜன், எதுவும் நடக்கவில்லை; நான் வேண்டுமானால் அழைத்துச் செல்கிறேன். பொன்னகரம் உள்ளிட்ட தெருக்களில், குடிநீரில் சாக்கடை கலக்கிறது. கொசுத் தொல்லையால், 80வது வார்டில் வசிக்கும், என் தம்பி மகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரி மாணவியான அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும், யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை; வரவும் இல்லை என்றார். இதையடுத்து குறுக்கிட்ட மேயர் ராஜன் செல்லப்பா, டெங்கு காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று விளக்கினார்.
தொடர்நது சுந்தரராஜன் பேசுகையில், மதுரையின் நலனுக்காக, முதல்வர் நிறைய நிதி ஒதுக்கி வருகிறார். அவரின் பெயரையும், மாநகராட்சியின் பெயரையும் கெடுக்க வேண்டும் என்பதற்காக, அதிகாரிகள் சிலர் தான், பணிகளை முடக்கி வருகின்றனர். அவர்களின் நடவடிக்கையால் தொகுதியின் பணிகள் தடைபடுகின்றன என்று குற்றம் சாட்டினார்.
அதற்குப் பதிலளித்த ராஜன் செல்லப்பா, தலைமைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் எம்.எல்.ஏ., நல்ல கருத்துக்களை எடுத்து வைத்திருக்கிறார். அதற்கேற்ப பணிகளை செய்து முடிப்போம் என்று விளக்கி முடித்தார்.
அடுத்து சுந்தரராஜன் நேரடியாக முதல்வரையே நேரில் பார்த்து தனது குமுறலைக் கொட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அதுவும் நடக்காமல் போனால் என்ன செய்வார் சுந்தர் என்று தேமுதிக வட்டாரம் ஆர்வத்துடன் காத்திருக்கிறதாம்.
விஜயகாந்த்துக்கு எச்சரிக்கை
சுந்தரராஜன் தனது பேச்சின்போது, தனது தொகுதியில் வந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்களிடம் குறைகள் கேட்பதைக் கண்டித்தும் பேசினார். அவர் கூறுகையில், தேமுதிகவினர் என்னிடம் தங்களது தொகுதி குரைகள் குறித்து கோரிக்கை வைத்தால், எம்.எல்.ஏ. என்ற முறையில் நிறைவேற்றித் தர தயாராக இருக்கிறேன். அதை விடுத்து, அவர்கள் தங்களது தலைவரை எனது தொகுதிக்கு அழைத்துவந்துள்ளனர். அவரும் தொகுதியில் சுற்றிவந்து குறைகளைக் கேட்டுச் சென்றாராம்.
இத்தகைய செயலை இதோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், நானும் அவர்களது தலைவரின் தொகுதிக்குச் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்பேன் என்றார் சுந்தரராஜன்.