ம.ந.கூ- தேமுதிக- தமாகா கூட்டணி உடைகிறது?: விரைவில் விஜயகாந்த், வாசன் அறிவிப்பு
சென்னை: மக்கள் நலக் கூட்டணியுடன் சட்டசபைத் தேர்தலுக்காக ஏற்படுத்திய கூட்டணியிலிருந்து தேமுதிகவும், தமாகாவும் விரைவில் வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை விஜயகாந்தும், வாசனும் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக, திமுக, ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக, தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் இறங்கிய வைகோவின் மக்கள் நலக்கூட்டணியுடன், விஜயகாந்தின் தேமுதிகவும், வாசனின் தமாகாவும் கைகோர்த்து இறங்கின. சட்டசபைத் தேர்தலில், இந்த அணியினர் 10 இடங்களிலாவது வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு இடத்தில் கூட, இவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
இதற்குக் காரணம் மக்கள் மத்தியில் இந்த கூட்டணியினரின் நம்பகத்தன்மை உறுதிப்பட வில்லை. குறிப்பாக, அடித்தட்டு மக்களின் ஆதரவை இந்த கூட்டணியால் பெற முடிய வில்லை என்பதுதான் உண்மை.
பின்வாங்கிய வைகோ
இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் விஜயகாந்த். ஒருங்கிணைப்பாளரான வைகோ, கடைசி நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யாமல், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்கி விட்டார்.
டெபாசிட் போச்சே
தேமுதிக 104 இடங்களில் போட்டியிட்டது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் உட்பட 1043 பேரும் படுதோல்வி அடைந்தனர். தனித்து போட்டியிட்ட போது கூட ஜெயித்த விஜயகாந்த், இம்முறை முதல்வர் வேட்பாளராக களமிறங்கியும், உளுந்தூர் பேட்டையில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டு, டெபாசிட்டை பறிகொடுத்த பெருமை யையும் பெற்றார். அக்கட்சியில் விஜயகாந்த் உள்பட 103 பேர் டெபாசிட்டை இழந்தனர்.
திருமாவளவனின் பரிதாப தோல்வி
காட்டு மன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவன், 87 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். ஒரே ஒரு தேர்தலிலேயே, இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள அத்தனை கட்சிகளும் பாதிப்புக்குள்ளாகி விட்டன.
கூட்டணியால் தோற்றோம்
இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பின் நடந்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பல செயலாளர்கள், "இந்த தேர்தல் தோல்விக்கு காரணம், மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்ததுதான்" என்று தெளிவுபட கூறியுள்ளனர். இதனை கேட்ட விஜயகாந்த் சிந்திக்க தொடங்கி விட்டாராம்.
வைகோவின் கருத்து
சமீபத்தில் நடந்த மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகளின் வலியுறுத்தல் பற்றி பேசிய வைகோ, ‘‘தேமுதிகவும், தமாகாவும் கூட்டணியை விட்டுச் சென்றால் எந்த பிரச்சினையும் இல்லை'' என்று கூறியதாக வெளியான செய்திகளை மதிமுக தரப்பில் மறுக்கவில்லை.
அதிருப்தியில் விஜயகாந்த்
வைகோவின் பேச்சால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிருப்தியில் உள்ளதாகவும், இதனால் மக்கள் நலக்கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுதீசும், பிரேமலதாவும் தேர்தலுக்குப் பின்னர் எந்த கருத்தையும் பகிரங்கமாக வெளியிடவில்லை.
கடனாளியாகிவிட்டோம்
தோல்வி குறித்து ஆலோசனை நடத்திய போது, ம.ந.கூட்டணியைத்தான் நிர்வாகி கள் பலரும் குறை சொன்னார்கள். மேலும், பூத் செலவுக்குக் கூட பணம் கொடுக்காததால்தான் தோல்வி அடைந்தோம். சொத்துக் களை அடமானம் வைத்து போட்டியிட்டதால், ஏதுமில்லாத வர்களாக உள்ளோம் என்று விஜயகாந்திடம் தேமுதிக வேட்பாளர்கள் சிலர் கூறினர்.
ரூ.10 லட்சம்
வேட்பாளர்கள், நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்ட விஜயகாந்த், பூத் செலவுக்கு பணம் வாங்காத வேட்பாளர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க ஒப்புக்கொண்டதாகவும், இதன்பேரில், 20 பேருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு ரகசியமாக பணம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மநகூவில் இருந்து வெளியேற்றம்
இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் சந்திரகுமார் தலைமையிலான மக்கள் தேமுதிகவினர் ஆள் பிடிக்கும் வேலைகளை செய்கின்றனர். எனவே, நிர்வாகி களை திருப்தி செய்யும் வகையில், மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகுவதற் கான அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக அறிவிப்பை வெளியிடும் விஜயகாந்த், கூடவே, கட்சியில் நிர்வாக ரீதியான மாற்றங்களையும் அவர் மேற்கொள்ளவுள்ளார். அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமகாவும் வெளியேறுகிறது?
இதே போன்ற நிலையில்தான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இருக்கிறது. த.மா.கா வின் மாநில நிர்வாகிகள் கூட்டமும், மாவட்ட தலைவர்கள் கூட்டமும் நடைபெற்றுள்ளது. இன்று மாநில செயலாளர்கள் கூட்டமும், 11ம் தேதி மாநில செயற்குழு உறுப்பினர்களின் கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், மநகூட்டணியில் இருந்து வெளியேறுவது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தமாகா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணி சிதறுகிறது
சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே இந்த கூட்டணி நீடிக்காது என்று சிலர் ஆருடம் கூறி வந்தனர். சிலரோ தேர்தலுக்குப் பின்னர் இந்த கூட்டணி சிதறும் என்று தெரிவித்தனர். ஒருவழியாக தேர்தலை சந்தித்த இந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இப்போது கூட்டணியில் இருந்து தேமுதிகவும், தமாகாவும் விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.