20 ஆண்டுகளுக்குப் பிறகு... திண்டுக்கல்லில் நேருக்கு நேர் மோதும் திமுக- அதிமுக... தொண்டர்கள் ஹேப்பி!
திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் திமுகவும், அதிமுகவும் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் நேரடியாக களமிறங்க இருப்பது அவ்விரு கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1952ம் ஆண்டு திண்டுக்கல் சட்டசபைத் தொகுதி உருவானது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்று சட்டசபைத் தேர்தல்களிலும் அந்தத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை புரிந்தது.
ஆனால், காங்கிரஸ் கோட்டையாகக் கருதப்பட்ட அத்தொகுதியை அடுத்து வந்த தேர்தல்களில் அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அடுத்தடுத்து கைப்பற்றின.
1996ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக இத்தொகுதியில் வெற்றி பெற்றது. ஆனால், அதனைத் தொடர்ந்து தனது கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டிற்கு அத்தொகுதியை விட்டுக் கொடுத்தது திமுக. இதனால், 1996ம் ஆண்டிற்குப் பின்னர் திண்டுக்கல்லில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதும் சூழல் ஏற்படவில்லை.
இந்நிலையில், தற்போது மக்கள் நலக்கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. இதனால், இம்முறை திண்டுக்கல்லில் திமுகவே நேரடியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் திண்டுக்கல் வேட்பாளராக திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். விரைவில் திமுகவும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறது.
இதனால், 20 ஆண்டுகளுக்குப் பின் திண்டுக்கல் தொகுதியில் திமுக - அதிமுக நேரடியாக மோத இருக்கிறது. இது அவ்விரு கட்சித் தொண்டர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த தேர்தல் வரை கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்காக பிரச்சாரம் செய்து வந்த திண்டுக்கல் திமுக தொண்டர்கள், தற்போது தங்களது கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்ய ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.