அதிமுகவைத் தொடர்ந்து.. திமுகவும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது
சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. திருச்சி, சேலம், தூத்துக்குடி மாநகராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான வார்டுகளை திமுக அறிவித்துள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 26ம் தேதி தொடங்கியது.
கடந்த சில தினங்களுக்கு முன், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமைத்த கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 10 நாட்களாக வேட்பாளர் பட்டியல் குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசித்து வந்தார். திமுக வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது. கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் முடிவு செய்யப்பட்ட பிறகு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று திமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. சேலம், திருச்சி, தூத்துக்குடி மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் கூட்டணி கட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டது.
சேலம் மாநகராட்சி
காங்கிரஸ் கட்சிக்கு சேலம் மாநகராட்சியில் 8, 9, 16, 17, 36 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 19வது வார்டு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் வார்டுகள்
அதேபோல தூத்துக்குடி மாநகராட்சியில் 7 வார்டுகளும், திருச்சி மாநகராட்சியில் 3 வார்டுகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் 6, 25, 35, 39, 50, 58, 59 ஆகிய 7 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் இந்தியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 20, 53 ஆகிய இரண்டு வார்டுகளை ஒதுக்கியுள்ளது.
காங்கிரஸ் அதிர்ச்சி
ஒரு சட்டசபைத் தொகுதிக்கு ஒரு வார்டு ஒதுக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்தது. ஆனால் கேட்டதை விட மிகக்குறைவான அளவிலேயே வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
9 மாநகராட்சிகளுக்கு எப்போது?
கூட்டணியில் இருந்த மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் கூட இதுவரை ஒதுக்கப்படவில்லை. கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியது போக மீதம் உள்ள இடங்களில் திமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். மீதமுள்ள 9 மாநகராட்சிக்களுக்கான வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்று திமுக அறிவித்துள்ளது.