ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் வேட்புமனு தாக்கல்
ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் அலுவலகம் சென்ற அவர், அதிகாரி பிரவீன் நாயரிடம் வேட்புமனுவை அளித்தார்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டார். இன்று தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது அவருடன் வட சென்னை மற்றும் கிழக்கு சென்னை மாவட்ட செயலாளர் சுதர்சனம் திமுக முக்கிய பிரமுகர்கள் சேகர் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனை முன்னிட்டு இன்று காலை அண்ணா அறிவாலயம் சென்ற மருது கணேஷ், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மருது கணேஷிடம், ஆர்.கே. நகரில் வெற்றி பெற கடினமாக உழைப்பதுடன் தொகுதி மக்களிடம் அதிமுக அரசின் மக்கள் விரோத செயல்களை எடுத்துக் கூற வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் மருது கணேஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக ஆர்.கே. நகர் தொகுதி இருந்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. குடிநீர் கிடைப்பதில்லை. சாலைகளில் கழிவு நீர் ஓடுகிறது. போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிக்கி திணறுகிறார்கள். காசிமேடு மீன்பிடி துறைமுகம் தொற்று நோய் பரப்பும் கூடாரமாக உள்ளது.
ரேஷன் கடைகளில் சீரான உணவுப் பொருட்கள் விநியோகம் கிடையாது. குண்டும் குழியுமான சாலைகள், தெரு விளக்குகள் எரியாததால், கொலை, கொள்ளைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் திமுக வெற்றி பெரும் என்று மருது கணேஷ் நம்பிக்கைத் தெரிவித்தார்.