தமிழகம் முழுவதும் வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவில் வெடித்தது கலகம்... கொந்தளிப்பில் தொண்டர்கள்
சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது முதலே பல தொகுதிகளில் திமுகவினர் அதிருப்தியில் கொந்தளித்து போயுள்ளனர். இதனால் திமுகவில் பெரும் கலகமே வெடித்திருக்கிறது.
சட்டசபை தேர்தலில் 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இதில் 97 பேர் பழைய முகங்கள்...76 பேர் புதுமுகங்கள்.
தற்போது தமிழகத்தின் பல தொகுதிகளில் பழைய முகங்களுக்கும் புதிய முகங்களுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுகவினரே வீதியில் இறங்கி கலகக் குரலை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் திமுக தலைமை என்ன செய்வது எனத் தெரியாமல் விக்கித்துப் போய் நிற்கிறது.

பொன்னேரி, வில்லிவாக்கம்
பொன்னேரி தொகுதியில் டாக்டர் பரிமளத்துக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சுந்தரத்தின் ஆதரவாளர்கள் களமிறங்கியுள்ளனர். திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில் சுந்தரத்துக்கு சீட் கிடைக்கவில்லை. அதனால் அவரது ஆதரவாளர்கள் டாக்டர் பரிமளத்தை மாற்றியாக வேண்டும் என போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கம் தொகுதி மாஜி எம்.எல்.ஏ. ரங்கநாதன் மீது ஏகப்பட்ட வழக்குகள் இருப்பதை அனைவரும் அறிவர். தற்போது அவருக்கு வில்லிவாக்கம் தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாமல் எதிர்ப்புக் குரலை எழுப்பி வருகின்றனர் திமுகவினர்.

அணைக்கட்டு, புவனகிரி
வேலூர் அணைக்கட்டு தொகுதியில் நந்தகுமார் வேட்பாளராக அறிவித்ததற்கு அணைக்கட்டு பாபுவின் ஆதரவாளர்கள் எரிமலையாக வெடித்து கிளம்பியுள்ளனர். உச்சகட்டமாக வேட்பாளர் நந்தகுமாரை திமுகவினரே அடித்து துவைத்துள்ளனர்.
புவனிகிரி தொகுதியில் எம்.ஆர். பன்னீர்செல்வத்தின் எதிர்கோஷ்டியைச் சேர்ந்த துரை சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை ஜீரணிக்க முடியாத எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கலகக் குரலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டையில் திமுக வேட்பாளர் கவிதாவுக்கு எதிராக இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஜோலார்பேட்டை தொகுதியைச் சேர்ந்த ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பது திமுகவினர் கோரிக்கை.

ஆலங்குடி, மானாமதுரை
புதுக்கோட்டை ஆலங்குடியில் அறந்தாங்கி ஒன்றிய செயலர் மெய்யநாதனுக்கு எப்படி வாய்ப்பு கொடுக்கலாம்? என டாக்டர் சதீஷ் தரப்பு கோதாவில் குதித்திருக்கிறது.. ஆலங்குடியில் சாலை மறியல், தீக்குளிப்பு முயற்சி என ஏகப்பட்ட களேபரங்கள் அரங்கேறிவிட்டன.
மானாமதுரை தனி தொகுதி எப்படியும் தனக்குத்தான் என நம்பிக் கொண்டிருந்தார் முன்னாள் அமைச்சர் தமிழரசி. ஆனால் மாஜி அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் மகள் சித்ரா செல்விக்கு திமுக தலைமை சீட் கொடுத்துவிட்டது. இதில் விரக்தியடைந்த தமிழரசி சென்னையில் முகாமிட்டு போராடிக் கொண்டிருக்கிறார்.

மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றம் தொகுதியில் முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையாவின் மகன் மணிமாறன் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக டாக்டர் சரவணன் கோஷ்டியினர் கொந்தளித்து போய் தலைமையுடன் மல்லுக்கட்டி வருகின்றனர்.
மதுரை மத்திய தொகுதியில் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மகன் தியாகராஜனுக்கு 'ஸ்டாலின்' சீட் வழங்கியிருக்கிறார். இதை நாங்கள் எப்படி ஏற்போம்? என்று மு.க. அழகிரி ஆதரவாளர்கள் எதிர்த்து வருகின்றனர்.

விளாத்திகுளம், பாளையங்கோட்டை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேட்பாளர் பீமராஜுக்கு எதிராக திமுகவினரே களமிறங்கியுள்ளனர். ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்பது திமுகவினர் கருத்தாக உள்ளது.
பாளையங்கோட்டை தொகுதியில் மீண்டும் முன்னாள் அமைச்சர் மைதீன்கானுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் வெளியான உடனேயே மைதீன்கான் உருவபொம்மையை எரித்து திமுகவினர் ஆவேசத்தை காட்டினர்.
இப்படி தமிழகம் முழுவதும் திமுகவினர் பல இடங்களில் தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திமுக தலைமை பெரும் கலக்கமடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications