குட்கா ஊழல் வழக்கு: நேர்மையான விசாரணை அதிகாரி ஜெயக்கொடி ஐஏஎஸ் மாற்றத்தை எதிர்த்து திமுக வழக்கு
குட்கா ஊழல் வழக்கை விசாரித்த அதிகாரி ஜெயக்கொடி ஐஏஎஸ் இடமாற்றப்பட்டதை கண்டித்து திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
சென்னை: குட்கா ஊழல் வழக்கை நேர்மையாக விசாரித்து வந்த ஜெயக்கொடி ஐஏஎஸ் அதிகாரியை தமிழக அரசு வேறு துறைக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சிக்கிய டைரி ஒன்றில் குட்கா விற்பனையை கண்டுக் கொள்ளாமல் இருக்க சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் ஆணையராக இருந்த ஜார்ஜ் ஆகியோருக்கு ரூ.40 கோடிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக அரசுக்கு உத்தரவு
இந்நிலையில் இந்த குட்கா ஊழல் தொடர்பாக சென்னை ஹைகோர்ட் மதுரை கிளையில் ஒரு பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குட்கா ஊழல் குறித்து விசாரணை அதிகாரியை வைத்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
ஆகஸ்ட் மாதம் நியமனம்
அதன்படி தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்து வி.கே.ஜெயக்கொடி, லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் துறை ஆணையராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.
புதிய ஆணையர் நியமனம்
குட்கா ஊழல் வழக்கு விசாரணை நேர்மையாக நடந்து வந்த நிலையில் கண்காணிப்பு ஆணையராக இருந்து ஜெயக்கொடி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மோகன் பியாரேவை குட்கா ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயக்கொடி இடமாற்றத்துக்கு எதிராக வழக்கு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் நேர்மையாக விசாரணை நடத்தி வந்த ஜெயக்கொடியை மீண்டும் ஊழல் கண்காணிப்பு ஆணையராக மாற்றம் செய்ய வேண்டும். அதேபோல் அப்பதவிக்கு தமிழக அரசால் புதிதாக நியமிக்கப்பட்ட மோகன் பிராரேவின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.