திமுக தொடர்ந்த குட்கா வழக்கு.. முன்கூட்டியே விசாரிக்க ஹைகோர்ட் முடிவு!
திமுக சார்பில் எம்.எல்.ஏ. அன்பழகன், சென்னை ஹைகோர்ட்டில் தொடர்ந்த குட்கா வழக்கு வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அளித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ள
சென்னை: தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. அன்பழகன் தொடர்ந்த குட்கா வழக்கை வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் அளித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள், அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி. , மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சமாக பல கோடி ரூபாய் கொடுத்தற்கான ஆவணங்கள் சிக்கியது.
இந்த ஆவணங்களின் அடிப்படையில், தமிழக அரசுக்கு வருமான வரித்துறை ஆணையர் கடிதம் அனுப்பினார். இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பினர்.
இதையடுத்து, புகையிலை பொருட்களை விற்பனை செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியுள்ளதால், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரி தி.மு.க. சார்பில், எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் , அடுத்தக்கட்ட விசாரணையை செப்டம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், தமிழக சட்டசபையில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுடன் வந்ததாக, தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது உரிமைக்குழு விசாரணை நடத்த, அண்மையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து, சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் முன்பு தி.மு.க. வக்கீல் நீலகண்டன் ஆஜராகி, 'குட்கா ஊழல் முறைகேடு குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள அதேநேரத்தில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது இந்த விவகாரம் குறித்து வேறு வழியில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முயற்சிக்கிறது. எனவே, செப்டம்பர் 11ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்ட அன்பழகன் வழக்கை, முன் கூட்டியே விசாரணைக்கு எடுக்கவேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக குறிப்பிட்டு உத்தரவு அளித்தனர்.