நாளை எடப்பாடி நம்பிக்கை வாக்கெடுப்பு.. எம்.எல்.ஏக்களுடன் இன்று திமுக அவசர ஆலோசனை
சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ளது. நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் புதிய முதல்வராக சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். அவரது அமைச்சரவையில் 31 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி 15 நாட்களில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்தக்கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிரூபிக்க வேண்டும்.
இந்த நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு கட்சித்தலைமை அழைப்பு விடுத்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக எம்எல்ஏக்கள் நடந்து கொள்ளும் விதம் பற்றி ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.