திமுக நிலைமை இப்ப தேவலாம்.. அதிமுகவுக்கு ஆதரவு 'கரைந்து' வருகிறது -தா.பா.
சென்னை: திமுவுக்கு முன்பு இருந்ததை விட இப்போது நம்பகத்தனமை தருகிற சூழ்நிலை வந்திருக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது...
தி.மு.க-வுக்குத் தொடக்கத்தில் இருந்ததைவிட இப்போது நம்பகத்தன்மை தருகிற சூழ்நிலை வந்திருப்பது உண்மை. அ.தி.மு.க. எடுத்த நிலை காரணமாக தி.மு.க-வுக்கு சிறுபான்மையினர் ஆதரவு பெருகி இருப்பது மறுக்க முடியாத ஒன்று. ஆகவே, தொடக்கத்தில் இருந்ததைவிட இப்போது தி.மு.க. முன்னேறி இருக்கிறது.
அதேபோல தேர்தல் தொடங்குவதற்கு முன்பு, அ.தி.மு.க-வுக்கு இருந்த நம்பிக்கை, மக்கள் தந்த ஆதரவு என்பது கரைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி வெற்றிபெற மாட்டோம் என்பதை அவர்களாகவே அறிவித்துவிட்டார்கள்.
தமிழகத்தில் சமூக சேர்க்கை காரணமாக பாஜக ஓரிரு இடங்களில் வெற்றி பெறக் கூடும் என்று நானும் நினைத்தது உண்டு. ஆனால், அவர்களின் தேர்தல் அறிக்கைக்குப் பின், தமிழகத்தில் அவர்களும் அவர்களோடு கூட்டுசேர்ந்தவர்களும் ஓர் இடத்தில்கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை.
கம்யூனிஸ்ட் இயக்கம் அமைத்துள்ள அணி அனைத்து இடங்களிலும் ஜெயிக்கும் என்று வீர வசனம் பேச மாட்டேன். ஏனென்றால், தேர்தல் என்பது பணம் புழங்கும் அரசியல் சந்தை. கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் சில தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.
வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளைக் கைப்பற்ற சில்லறை வியாபாரிகள் தமிழில் பேசிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், இந்த சில்லறை வியாபாரிகள் தாங்கள் கொள்முதல் செய்ததை குஜராத் மொத்த வியாபாரியிடம் முழுமையாக விற்கப்போகிறார்கள். இதை தமிழ் மக்கள் உணர வேண்டும் என்றார் அவர்.