தாலி அணிவது, அணியாதது, கழற்றுவது அவரவர் நம்பிக்கை: தி.க.வுக்கு கருணாநிதி ஆதரவு
சென்னை: தாலி அகற்றுதல் விவகாரத்தில் அதை அணிவதும் கழற்றுவதும் தனிநபர் நம்பிக்கை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மார்ச் 8-ந் தேதி பெண்கள் தினத்தையொட்டி தாலி பெண்ணுக்கு பெருமையா? சிறுமையா என்ற தலைப்பில் தொலைக்காட்சி ஒன்றில் விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட இருந்தது. ஆனால் இந்துத்துவா குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அது ஒளிபரப்பாகவில்லை.

பின்னர் அதே தொலைக்காட்சி மீது டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 14-ந் தேதி சென்னையில் தாலி அகற்றுதல் -மாட்டு இறைச்சி உண்ணும் நிகழ்வு நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிவித்தார்.
இதன் பிறகு தாலி குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று தாலி சர்ச்சை குறித்து கூறியிருப்பதாவது:
பிள்ளையாரை வணங்கவும் மாட்டேன், பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கவும் மாட்டேன்" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதைப் போல,
தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும், அணிந்த பிறகு அதை வேண்டாமென்று கழற்றி வைத்து விடுவதும் என்பது அவரவர் விருப்பத்தையும், நம்பிக்கையையும், தனிப்பட்ட உரிமையையும் சார்ந்தது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications