தமிழக தேர்தலில் திமுக 143, அதிமுக 70 இடங்களில் வெல்லலாம்- பிரண்ணாய் ராய் கணிப்பு
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் இந்த முறை வாக்குகள் சிதறியுள்ளன. வலுவான மூன்றாவது அணி அமைந்துள்ளது. எனவே 36.5 சதவீத வாக்குகள் கிடைத்தாலே கூட போதும், அந்த அணி 118 என்ற மெஜாரிட்டி இலக்கை எட்டி விட முடியும்.
தற்போது உள்ள சூழலில் திமுக அணிக்கு 143 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிமுகவுக்கு 70 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று என்டிடியின் பிரண்ணாய் ராய் கணித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெல்லப் போவது யார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இதற்கான விடை தெரிந்து விடும் என்றாலும் கூட குழப்பமடைந்து கிடக்கும் தமிழக அரசியல் சூழலில் இந்த முறை வெல்லப் போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அதை விட முக்கியமாக இதுவரை இல்லாத அளவுக்கு திமுக, அதிமுகவுக்கு கடும் சவால் விடும் வகையில் வட மாவட்டங்களில் புத்தெழுச்சியுடன் பாமகவும், மறுபக்கம் மூன்றாவது அணியும் பெரும் தலைவலியாக மாறியுள்ளன. இந்த நிலையில் பிரண்ணாய் ராய் தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கலாம் என்பது குறித்து கணித்துள்ளார். இதுகுறித்த செய்தி:

36.5 சதவீத வாக்குகள் போதும்
தற்போதுள்ள தமிழக சட்டசபை நிலவரத்தையும், கூட்டணிகளையும் வைத்துப் பார்க்கும்போது 36.5 சதவீத வாக்குகளைப் பெறும் அணி அல்லது கட்சி, பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எளிதாக கைப்பற்ற முடியும்.

திமுக கூட்டணிக்கு வாய்ப்பு
தற்போதுள்ள நிலையில் திமுக தலைமையிலான திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆட்சி மீதான அதிருப்தி அலையால் சேரும் வாக்குகளும் கிடைப்பதால் அந்தக் கூட்டமி வசம் ஆட்சி போகும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. அதிருப்தி வகையில் மட்டும் திமுகவுக்கு 5.75 சதவீத வாக்குகள் வந்து சேரும்.

அதே கட்சிக்கு வாக்களிக்காத தமிழகம்
தமிழகத்தில் ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் மக்கள் அடுத்த தேர்தலில் அதே கட்சியைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். இது 1984 முதல் தொடரந்து வருகிறது. அந்த அடிப்படையில் பார்த்தாலும் இந்த முறை அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று
கணிக்கலாம்.

சட்டசபைத் தேர்தல் - லோக்சபா தேர்தல்
மேலும் தமிழகத்தில் பொதுவாக ஒரு கட்சி சட்டசபைத் தேர்தலில் பெரிய வெற்றி பெற்றால், அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் சரிவைச் சந்திப்பது வழக்கமாக உள்ளது. 1999 லோக்சபா தேர்தலில் திமுக 47 சதவீத வாக்குகளைப் பெற்றது. அடுத்து வந்த 2001 சட்டசபைத் தேர்தலில் அது 38 சதவீதமாக சரிந்தது. இதேபோல 2004 லோக்சபா தேர்தலில் 57சதவீத வாக்குகள் கிடைத்தன. அதுவே 2006 சட்டசபைத் தேர்தலில் 45சதவீதமாக இறங்கியது. 2014 லோக்சபா தேர்தலில் அதிமுக 44 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்த முறை அதற்கு வாக்குகள் குறையும் என்பது உறுதி.

வலுவான 3வது அணி
தமிழகத்தில் முதல் முறையாக வலுவான 3வது அணி ஒன்று அமைந்துள்ளது. தேமுதிக-தமாகா- மக்கள் நலக் கூட்டணி ஒரு பககம் என்றால், மறுபக்கம் அன்புமணி தலைமையில் பாமகவும் வலுவாக உள்ளது.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் சரிவு
இது Index of Opposition Unity எனப்படும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் அளவில் சரிவை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வாக்குகள் பிரிகின்றன. எனவே கடந்த முறை போல இல்லாமல், 36.5 சதவீத வாக்குகள் கிடைத்தாலே அந்தக் கட்சி
அல்லது கூட்டணி ஆட்சியைப் பிடிக்கத் தேவையான 118 இடங்களில் வெல்ல முடியம்.

பெரும் சரிவு
கடந்த 2001 தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அளவானது 80 சதவீதமாக இருந்தது. அது 2006 தேர்தலில் 74 ஆக குறைந்தது. 2011 தேர்தலில் 84 சதவீதமாக இருந்தது. தற்போது அது 65 சதவீதமாக இறங்கியுள்ளது.

வாக்கு சதவீத நிலவரம்
தற்போது ஆளும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடம் 38 முதல் 44 சதவீத வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகள் முழுமையாக கிடைத்தால் 195 இடங்களில் அது வெல்லலாம். திமுக - காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு சதவீதம் 31 சதவீதமாகும். இது கிடைத்தால் 46 சீட்தான் வெல்ல முடியும். 3வது அணியிடம் 14 சதவீதம் உள்ளது. 2 சீட் வெல்லலாம். மற்றவர்களிடம் 13 சதவீதம் இருக்கிறது, 9 இடங்களில் வெல்ல முடியும்.

3 சதவீதம் அதிமுகவிலிருந்து விலகினால்
இதில் அதிமுக கூட்டணியிலிருந்து 3 சதவீத அதிருப்தி வாக்குகள் பிரிந்து திமுகவுக்கு சாதமாக மாறினால் திமுக கூட்டணிக்கு 62 தொகுதிகள் கிடைக்கும். 5 சதவீத வாக்குகள் பிரிந்தால் 99 சீட் கிடைக்கும். 5.75 வாக்குகள் பிரிந்தால் 120 இடங்கள் கிடைக்கும். அதிமுகவுக்கு 94 இடங்களே கிடைக்கும்.

7 சதவீத வாக்குகள் பிரிய வாய்ப்பு
இருப்பினும் அதிமுகவிலிருந்து 7 சதவீத அளவுக்கு அதிருப்தி வாக்குகள் திமுகவுக்கு சாதகமாக பிரியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்குமானால் திமுகவுக்கு 143 இடங்கள் கிடைக்கலாம். அதிமுகவுக்கு 70 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புண்டு. எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வாக்குகள் பிரிந்து வருவதில்லை. ஆனால் தமிழகத்தில் 1984ம் ஆண்டு முதல் சராசரி அளவானது 10 சதவீதமாக உள்ளதை நாம் மறக்கக் கூடாது என்று அந்தக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்து ராம் உள்ளிட்டோர் இந்த கணிப்பு விவாதத்தில் கலந்து கொண்டனர்.

கணிப்பைக் கைவிட்ட பிரண்ணாய் ராய்
முன்பு தேர்தல் கருத்துக் கணிப்புகளில் பிரபலமாக இருந்தவர்கள் பிரண்ணாய் ராயும், அவரது என்டிடிவியும். ஆனால் ஒருமுறை தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக அவர் கணித்த ஒரு கணிப்பு முற்றிலும் தலைகீழாகப் போனதைத் தொடர்ந்து கருத்துக் கணிப்பையே நிறுத்தி விட்டது என்டிடிவி என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications