"போடா.. மரியாதையா போய்டு.." இளைஞர் கேட்ட ஒரே ஒரு கேள்வி! திடீரென ஆவேசமான திமுக எம்எல்ஏ உதயசூரியன்
கள்ளக்குறிச்சி: ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுக சார்பில் பிரச்சார கூட்டம் நடந்து வருகிறது. அப்படி கள்ளக்குறிச்சியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் திமுக எம்எல்ஏ டி. உதயசூரியன் பங்கேற்றார். அப்போது அவரிடம் இளைஞர் ஒருவர் ரோடு மட்டும் போடவே இல்லையே எனக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த திமுக எம்எல்ஏ உதயசூரியன் அந்த இளைஞரைப் பார்த்து "போடா" எனத் திட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் தேர்தல் நடைபெறுகிறது. இருப்பினும், இந்தாண்டே அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன. எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை ஏற்கனவே அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுக்க சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

திமுக
மறுபுறம் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் திமுக மேற்கொண்டுள்ள நலத்திட்டங்களை மக்களிடம் கொண்ட கொண்டு சேர்ப்பதும், திமுக உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பதுமே இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த பிரச்சார நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ உதயசூரியன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் மோசமான சாலைகள் குறித்து கேள்வி எழுப்பிய இளைஞரை அவர் திட்டியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதாவது உதயசூரியன் அப்பகுதியில் உள்ள மக்களிடம் திமுக சாதனைகளை விளக்கும் போஸ்டர்களை கொடுத்திருக்கிறார். மேலும், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையையும் கொடுத்திருக்கிறார். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர், "நீங்கள் சாலைகள் எதுவும் போடவில்லை. இந்த போஸ்டரை மட்டும் வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டுள்ளார்.
திமுக எம்எல்ஏ ஆவேசம்
இதைக் கேட்டுக் கோபமடைந்த எம்எல்ஏ உதயசூரியன் அந்த இளைஞரைப் பார்த்து, "போடா" என்று திட்டியுள்ளார்.. அந்த நபர் தொடர்ந்து கேள்வி கேட்டபோது, "மரியாதையாகப் பேசு.. இல்லைன்னா நடக்கறதே வேற" என்று சொல்லியுள்ளார். அதற்கு அந்த நபர், "நான் மரியாதையாகத்தான் பேசுகிறேன்" என்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
திமுக விளக்கம்
இதற்கிடையில் இந்தச் சம்பவம் குறித்து திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் விளக்கமளித்துள்ளார். அதாவது கேள்வி எழுப்பிய நபரும் கூட திமுகவை சேர்ந்தவர் தான் என்றும் இதன் காரணமாகவே எம்எல்ஏ உரிமையில் அப்படிப் பேசியதாகவும் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை பொது வெளியில் எழுப்புவதற்குப் பதிலாகத் தனிப்பட்ட முறையில் விவாதித்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக குற்றச்சாட்டு
முன்னதாக இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், உதயசூரியனின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காகச் சென்ற சங்கராபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், "சாலை வசதி செய்துதராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்?" என அப்பகுதி இளைஞர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
வாக்களித்த மக்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்லி பழக்கமில்லாத திமுகவைச் சேர்ந்த உடன்பிறப்புகள் அந்த இளைஞர்களை அடக்க முற்படுகின்றனர். திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ஒருபடி மேலே சென்று அந்த இளைஞர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டும் தொனியில் பேசுகிறார். உதயசூரியன் இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. இதுதான் கட்டப்பஞ்சாயத்து மாடல் அரசின் உண்மை முகம்.
அழிவின் ஆரம்பம்
திமுகவின் வெற்று விளம்பரங்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடுவார்கள் என மனக்கோட்டை கட்டி வந்த திமுக தலைவர்களை, போகும் இடங்களிலெல்லாம் மக்கள் தங்கள் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள். ஆட்சி அமைந்ததும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தராத திமுக கட்சிக்கு, ஆள்சேர்க்கை ஒரு கேடா? என மக்கள் கொந்தளிக்கிறார்கள். அதை எதிர்பாராத திமுக தலைவர்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் தங்கள் நிதானத்தை இழக்கிறார்கள். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?
கடந்த நான்கு வருடங்களாகக் கால் வைக்கும் இடங்களிலெல்லாம், கையில் கிடைக்கும் துறைகளிலெல்லாம் ஊழல் செய்துவிட்டு, தேர்தல் நெருங்கும் காலத்தில் ஒன்றும் தெரியாதது போல் மக்களைச் சென்று நலம் விசாரித்தால் இதுதான் நடக்கும். கோடிகோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது!" என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications