கடலூரில் ஆளுநர் ஆய்வு நடத்த எதிர்ப்பு... திமுக, விசிக கருப்புக் கொடி காட்டி போராட்டம்!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடலூரில் ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
கடலூர் : அதிகார வரம்பை மீறி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடலூரில் இன்று ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தலைமையில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சென்னையில் இருந்து, வைகை விரைவு ரயில் மூலம் வந்தடைந்தார். விருத்தாசலத்தில் கால்களை இழந்த 301 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை ஆளுநர் வழங்கினார்.
அங்கிருந்து கார் மூலம் கடலூர் சுற்றுலா மாளிகை வந்தடைந்தார். இன்று பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தை கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் துவக்கி வைக்கவும், பிறகு மாவட்டத்தின் முக்கிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆளுநர் ஆய்விற்கு எதிர்ப்பு
ஆளுநர் வருகையால் கடலூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கடலூரில் ஆளுநர் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மஞ்சக்குப்பம் பகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
அதிகார வரம்பை மீறி ஆளுநர் ஆய்வுகளை மேற்கொள்வதாக பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். கடலூரில் வந்து குப்பைகள் அகற்றும் பணியை ஆளுநர் பார்வையிடத் தேவையில்லை, தலைமைச் செயலகத்தில் தான் அனைத்து குப்பைகளும் இருக்கின்றன என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பேருந்து நிலைய ஆய்வை கைவிட்ட ஆளுநர்
ஆளுநர் கடலூரில் இருந்து செல்லும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். ஆளுநர் செல்லும் வழியில் கருப்புக் கொடி காண்பித்து புதுச்சேரி கடலூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்திலும் திமுக, விசிக ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே திமுக போராட்டத்தால் கடலூர் பேருந்து நிலையத்தில் நடக்க இருந்த தூய்மை இந்தியா திட்டப் பணியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கைவிட்டார். மாற்று வழியில் வண்டிபாளையம் சென்ற அவர் அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
|
ஆளுநருக்கு எதிராக முழக்கம்
வண்டிப்பாளையத்தில் ஆய்வை முடித்துக் கொண்டு மஞ்சக்குப்பத்தில் உள்ள திமுக அலுவலகம் வழியாக ஆளுநர் விருந்தினர் மாளிகைக்கு திரும்பினார். அப்போது திமுக அலுவலகம் எதிரே திரண்டிருந்த கட்சியினர் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.