எம்.ஜி.ஆர். சமாதி இரட்டை இலைச் சின்னத்தை துணியைப் போட்டு மூடக் கோரி திமுக வழக்கு
சென்னை: சென்னை கடற்கரையில், அதிமுக அரசு எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அமைத்துள்ள இரட்டை இலை சின்னம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதை திரையைப் போட்டு மூட உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதிக்கு முன்பு பறக்கும் குதிரையுடன் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் வடிவம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சின்னத்தை அகற்றக்கோரி ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ள சூழ்நிலையில் இந்த சின்னம் வாக்காளர் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, இந்த சின்னத்தை திரையிட்டு மூடுவதற்கு தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். இதற்கான செலவினை அதிமுகவிடம் இருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
நீதிபதி வேணுகோபால் இந்த வழக்கை விசாரிக்கவுள்ளார்.