என்னை சின்னவர்னு கூப்பிடாதீங்க.. தாத்தா வச்ச பேர் இருக்கே! திமுகவினரை கேட்டுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின்
மயிலாடுதுறை: என்னை சின்னவர் என்று அழைக்காதீர்கள், கருணாநிதி வைத்த பெயர் உதயநிதி, அப்படியே அழையுங்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தை செம்பனார்கோவிலில் உள்ள பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து, மயிலாடுதுறையில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுக்கு விமானி இல்லாமல் கூட செல்வார், ஆனால் அதானி இல்லாமல் செல்ல மாட்டார்.
எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதால் தான் ஒன்றிய அரசு திமுகவை எதிர்க்கிறது. திமுகவில் சாதாரண கிளைச்செயலாளரை கூட பாஜக அரசால் ஒன்றும் செய்ய முடியாது. நமது முதலமைச்சர் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை வழங்கிக்கொண்டிருக்கிறார்.
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். இதனைக் கண்டு பாஜக அஞ்சுகிறது. மத்திய அரசு அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட சோதனைகளை மேற்கொண்டு திமுக அரசை அச்சுறுத்த நினைக்கிறது.

என்னை சின்னவர் என்று அழைக்காதீர்கள், கருணாநிதி வைத்த பெயர் உதயநிதி, அப்படி அழைத்தாலே போதும். நான் உண்மையாகவே அரசியல் அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது சின்னவன்தான்." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications