காய்ச்சலுக்கு பாட்டி வைத்தியம் கூடாது... மருத்துவமனைக்கு வாங்க - அமைச்சர் சி. விஜயபாஸ்கர்
காய்ச்சல் வந்தால் வீட்டில் சுயமாக மருத்துவம் பார்க்கவேண்டாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
சேலம்: காய்ச்சல் வந்துவிட்டால் வீட்டிலேயே சுய மருத்துவம் பார்க்கும் வழக்கத்தை விட்டுவிட்டு உடனடியாக மருத்துவமனைகளை நாட வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்சலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் பாதித்துள்ளனர். மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயின் தீவிரத்தால் மேற்கு மாவட்டங்களில் பலர் உயிரிழந்தனர்.

சேலத்தில் இன்று டெங்கு பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். அப்போது அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அமைச்சர் கூறுகையில்,
" 24 மணி நேரத்தில் எல்லா வகையான வைரஸ் காய்ச்சலையும் அறிய வசதிகள் உள்ளன. டெங்குவைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலால் ஒருவர் இறந்தார் என்ற நிலையே ஏற்படக் கூடாது .
நன்னீரில் உருவாகும் கொசு பகலில் மட்டுமே கடிக்கும். டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சேலத்தில் தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் வந்த உடனேயே அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க, ஏராளமான குழுக்கள் அமைக்கப்பட்டு பல கோணங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சலுக்கு சுய மருத்துவம் பார்க்க வேண்டாம்.
தமிழகத்தையொட்டியுள்ள கேரளாவிலும், இலங்கையிலும் டெங்கு காய்ச்சல் பாதித்தோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போலி மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. " என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications