கருணாநிதியை சந்தித்த டாக்டர் ராமதாஸ்… திருமணப் பத்திரிக்கை மூலம் கூட்டணிக்கு அச்சாரம்
சென்னை: அரசியல் நாகரீகத்தை கடைபிடிப்பவர் கருணாநிதி. அது எப்போதும் வளரவேண்டும் என்று நினைப்பவர் என திமுக தலைவரை பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.
தி.மு.க தலைவர் கருணாநிதியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மனைவி சரஸ்வதியுடன் சென்று கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் சந்தித்து தனது பேத்தி, பேரனின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும் தனது மகனுமான அன்புமணியின் மகள் மகள் சம்யுக்தா மற்றும் பிரித்தீவன் ஆகியோருக்கு வரும் அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்த திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்த திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தும்படி கேட்டுக் கொண்டார்.
அரசியல் நாகரீகம்
இந்த சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ்,கலைஞரை பொறுத்தவரையில் அரசியல் நாகரீகத்தை எப்போதும் கடைப்பிடிப்பவர். அது வளர வேண்டும் என்று நினைப்பவர்.
திருமணத்திற்கு அழைப்பு
அந்த எண்ணத்திலேதான் ஒவ்வொரு முறையும் எங்களது இல்ல திருமணத்திற்கு அழைக்கும்போதெல்லாம் அவர் கட்டாயம் கலந்துகொண்டிருக்கிறார். இந்த திருமண விழாவிலும் அவர் நிச்சயம் கலந்துகொள்வார் என்றார் டாக்டர் ராமதாஸ்.
பேரனின் திருமணம்
கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதேபோல ஒரு திருமண நிகழ்வின் போதுதான் திமுக - பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. தனது பேரனின் திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற போது திமுக - பாமக கூட்டணி முடிவு செய்யப்பட்டு தொகுதி பங்கீடும் உறுதியானது. அப்போது நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் போது திமுக உடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் இந்தக் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.
திராவிட கட்சிகளுடன் கூட்டணி
பின்னர் கூட்டணியில் இருந்து விலகிய டாக்டர் ராமதாஸ் திமுக, அதிமுக உடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கூறினார்.
பேத்தியின் திருமணம்
ஆனால் திடீரென தனது பேத்தியின் திருமண பத்திரிக்கை கொடுக்க டாக்டர் ராமதாஸ் நேரடியாக கருணாநிதியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இது சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கான முன்னோட்ட சந்திப்பு என்றும் கூறப்படுகிறது.
நெருங்கும் எதிர்கட்சிகள்
களத்தில் எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதா பேசியது எதிர்கட்சியினரை உசுப்பேற்றியுள்ளது. எனவேதான் ஜெயலலிதாவை தேர்தல் களத்தில் எதிர்க்க திமுக உடன் பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் இணைவது என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 15ஆம் தேதி மதிமுக மாநாட்டில் பேசிய வைகோ, கருணாநிதியை பாராட்டினார். இன்றைக்கு திருமணப் பத்திரிக்கை கொடுப்பதன் மூலம் பாமக ராமதாஸ் நேரடியாகவே கருணாநிதியை சந்தித்துள்ளார்.