நோட்டின் ஓரத்தில் எழுதியது அப்படியே இருக்கிறது.. இது ராமதாஸ் 'சொல்லி மறந்த கதை'...!
சென்னை: டாக்டர் ராமதாஸ் சொன்ன சொல்லை அவரே வசதியாக மறந்து விடுவார். அதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம். அப்படித்தான் இப்போதும் அவர் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக சொன்னதை மறந்து விட்டு இப்போது மகனின் வெற்றியை பெருமிதத்துடன் விருந்து வைத்துக் கொண்டாடி வருகிறார்.
ஆனால் இந்த செய்தியாளர்களின் பாவி மனசுதான் கிடந்து தவிக்கிறது.. ஐயா ஒருமுறை பேட்டியில் சொன்ன சொல்லை மறக்க முடியாமல்.
அப்படி என்னதான் சொன்னார் டாக்டர்.. வாங்க அதையும் பார்த்து விட்டு வருவோம்...
நான் சொல்றதை அப்படியே எழுதிக்குங்க...
லோக்சபா தேர்தலுக்கு சிலமாதங்களுக்கு முன்பு ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூட்டணி குறித்து சிலர் டாக்டர் ராமதாஸிடம் கேட்டனர். அதற்கு டாக்டர் சொன்னார்.. நான் இப்போது சொல்லப் போவதை உங்களது நோட் பேடின் ஒரு ஓரத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்...
பாஜகவுடன் ஒருபோதும் சேர மாட்டோம்
டாக்டர் தொடர்ந்து பேசினார்.. நாங்கள் ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்.. இதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்...
சேர்ந்தது மட்டுமல்லாமல்...
அவர் சொல்லி விட்டுப் போய் விட்டார். கடமையே கண்ணாக எழுதி வைத்திருந்த செய்தியாளர்கள்தான், இப்போது அந்த எழுத்தை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகிறார்கள்.. சொன்னதை மீறியதோடு விட்டாரா டாக்டர்.... இப்போது மத்திய அமைச்சர் பதவிக்கும் ரகசியமாகவும், சற்றே பகிரங்கமாகவும் பாஜகவிடம் லாபி செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.
இந்த போஸ்ட்தான் வேண்டும்
முன்பு அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். இந்த முறையும் அதே கேபினட் போஸ்ட்தான் வேண்டாம் என்று பாமக தரப்பில் பாஜகவிடம் சொல்லி வருகிறார்களாம். அப்படி இல்லாவிட்டால் அதேபோன்ற முக்கியத் துறையையும் கேட்டு வருகிறார்களாம்.
எப்படி இப்படியெல்லாம்
அரசியலில் எதுவுமே நிரந்தரமில்லை என்று சொல்வதை அரசியல்வாதிகளே அடிக்கடி நிரூபித்து விடுவார்கள். டாக்டர் ராமதாஸும், பாமகவும் அதற்கு விதி விலக்கில்லைதான். இருப்பினும் சொன்ன வேகத்தில் மறப்பது என்பது சற்று ஜீரணிக்க கஷ்டமாகத்தான் இருக்கிறது.
சொல்லி மறந்த கதை...
இதேபோலத்தான் டாக்டர் ராமதாஸ் நிறையவே சொல்லியுள்ளார் கடந்த காலத்தில்.. எனது குடும்பத்திலிருந்து யாரும் எம்.பி, எம்.எல்.ஏ ஆக மாட்டோம், அமைச்சர் பதவிக்கு வர மாட்டோம்.. என்று.. எல்லாம் மறைந்து போய் கரைந்து போய்.. காலமாகிப் போய் வெகு காலமாகி விட்டது..
எனவே டாக்டர் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம் என்று சொன்னதையும் அதேபோல நாமும் லைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் போலும்.