மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரை கைது செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
''நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி யை அடுத்த கொண்டல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் பயின்று வரும் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றும் மூவேந்தன் என்பவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.
கொண்டல் கிராமத்தில் செயல்பட்டு வருவது ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளி என்றாலும் அதில் அப்பகுதியை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட குழந்தைகளும் பெருமளவில் பயின்று வருகின்றனர். அந்த மாணவிகளிடம் தற்காலிக ஆசிரியர் மூவேந்தன் நீண்ட நாட்களாகவே தவறாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
பல நேரங்களில் மாணவிகளிடம் ஆசிரியர் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கூறியுள்ளனர்.
மாணவ-மாணவிகளுக்கு படிப்பையும், நல்ல புத்தியையும் கற்றுத்தர வேண்டிய ஆசிரியரே மிருகமாக மாறி இதுபோல நடந்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. வேலியே பயிரை மேயும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர அனுமதிக்கப்பட்டால், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
நினைத்துப் பார்க்கவே வலிக்கும் இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்ட ஆசிரியர் மூவேந்தனுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட்டால்தான் இனிவரும் காலங்களில் இதுபோன்ற இழிவான செயல் களில் ஈடுபட மற்றவர்கள் அஞ்சுவார்கள்.
இந்த கொடூரத்தை நிகழ்த்திய தற்காலிக ஆசிரியர் மூவேந்தன் கொண்டல் ஆதிதிராவிட காலனியை சேர்ந்தவர் ஆவார். அவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்ட 10 மாணவிகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். இதை வைத்து பார்க்கும்போது நடந்தவை அனைத்தும் திட்டமிட்ட செயல்களாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. இதன் பின்னணியில் காதல் நாடகங்களை ஊக்குவிக்கும் கும்பல் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அவனுக்கு துணையாக இருந்த பள்ளியின் மற்ற ஆசிரியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் இதுபோன்ற கொடுமைகள் நடக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''என்று கூறி உள்ளார்.