புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்கிறது... - ரஜினியை கலாய்த்த கடம்பூர் ராஜூ
புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்ளக்கூடாது என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி: தமிழகத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால், திராவிட கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. திராவிட கட்சிகள் தான் எப்போதும் ஆட்சியில் இருக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சி வருகிற 2021-ம் ஆண்டுக்கு பின்னரும் சிறப்பாக தொடரும் என்றார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் போன்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சி 2 அல்லது 3 மாதங்களில் கலைந்து விடும் என்று கூறி வருகின்றனர். இது எதிர்க்கட்சிகளின் வழக்கமான கோஷம் தான்.
சிஸ்டம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்வதற்குகூட தெரியாதவர்கள் எல்லாம் அரசியலில் ஆழம் பார்க்க நினைக்கிறார்கள். திரைப்படத்துறையினர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்-ரை நினைத்து புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கொண்ட கதையாக அரசியலுக்கு வருகிறார்கள். யாரும் இங்கு மீண்டும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது.
தமிழகத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால், திராவிட கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. திராவிட கட்சிகள் தான் எப்போதும் ஆட்சியில் இருக்கும். தமிழகத்தில் இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
திராவிட பாரம்பரியம் மிக்க மண்தான் நமது தமிழகம். திராவிடத்திற்கு மாற்றாக எந்தக் கட்சியும் தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது இங்கு சாத்தியமில்லை. அதனால் ரஜினிகாந்த்தின் ஆன்மீக அரசியல் எதுவும் இங்கு எடுபடாது, என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications