போதை சாக்லேட் பறிமுதல்: சென்னை கலெக்டருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
சென்னை: சென்னையில் போதை சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை கலெக்டருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போதை சாக்லெட்கள் பறிமுதல் குறித்தும், இந்த நோட்டீசுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி இந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. மேலும், போதை சாக்லெட் தடுப்பு நடவடிக்கை குறித்தும் விளக்கும்படியும் கூறப்பட்டுள்ளது.
சென்னை, விழுப்புரம், தருமபுரி, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பள்ளிகளுக்கு அருகில் இருந்த கடைகளில் விற்பனை செய்யப்பட்ட போதை சாக்லேட்டுகள் கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை தண்டையார் பேட்டையில் இந்த போதை சாக்லேட்டுகளை சாப்பிட்ட மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. சில மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் கடந்த சில தினங்களாக ரெய்டு நடத்தி சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.
போதை சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை ஆட்சியர் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீசில் போதை சாக்லேட் குறித்து மாவட்ட ஆட்சியர் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.