திமுக மனித சங்கிலியில் பட்டாசுடன் வெடித்து சிதறிய போலி நோட்டுக்கள்... பரபரப்பு
தாம்பரத்தில் திமுகவினர் நடத்திய மனித சங்கிலி போராட்டத்தில் போலி ரூபாய் நோட்டுகள் பறக்கவிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து , மத்திய அரசின் அறிவிப்பை திரும்பப்பெறக்கோரியும் தமிழகம் முழுவதும் நேற்று திமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
சென்னையில் திமுகவினர் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர். மு.க.ஸ்டாலின் திறந்த ஆட்டோவில் நின்ற படியே மனித சங்கிலியை பார்வையிட்டார். அவர் புரசைவாக்கம், டவுட்டன், பட்டாளம், குன்னூர் நெடுஞ்சாலை, பெரம்பூர், பெரவள்ளூர் வழியாக கொளத்தூர் வரை சென்று பேரணியை பார்வையிட்டார்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் நந்தனம் சிக்னலில் தொடங்கி மீனம்பாக்கம் பன்னாட்டு விமானம் நிலையம் வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தாம்பரம் திமுக சார்பில், பல்லாவரத்தில் இருந்து பெருங்களத்தூர் வரை தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு நீண்ட வரிசையில் கைக்கார்த்து நின்றனர்.
தாம்பரத்தில் நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில் திமுகவினர் திடீரென பட்டாசு வெடித்தனர். அப்போது அதில் இருந்து போலி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் நடிகர், நடிகைகள் படத்துடன் பறந்து சாலைகளில் விழுந்தன. இவை பார்ப்பதற்கு அசல் ரூபாய் நோட்டுகள் போல இருந்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செல்லாத நோட்டுக்களை பட்டாசு கட்டுக்குள் போட்டு கொளுத்தி விட்டார்களோ என்று பலரும் ஆர்வத்துடன் வந்து பார்த்தனர். அவை போலி நோட்டுக்கள் என்று தெரியவே அதை கீழே போட்டு விட்டுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications