"துரை நான் தூங்க போகவா" என கேட்பாரே!... கருணாநிதி குறித்து கண்கலங்கிய துரைமுருகன்
கருணாநிதி குறித்து பேசும் போது துரைமுருகன் கண்கலங்கினார்.
Recommended Video
வேலூர்: கருணாநிதி குறித்து துரைமுருகன் பேசியபோது கண்கலங்கி மேலும் பேச்சை தொடர முடியாமல் தவித்தார்.
கருணாநிதி கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த 7-ஆம் தேதி காலமானார். இதனால் மக்களும் தொண்டர்களும் பெரும் சோகத்தில் உள்ளனர்.
இந்நிலையில் திமுக தலைவரை விதைத்த இடத்தில் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே திமுகவினர் ஆங்காங்கே இரங்கல் கூட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்டேன்
அதன்படி நேற்று வேலூரில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் துரைமுருகன், கருணாநிதி குறித்து பேசுகையில், அவர் இல்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டவன் போல் உணர்கிறேன்.
56 ஆண்டுகள்
கருணாநிதியின் மறைவை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று அழுதபடியே பேசினார். மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், கருணாநிதியுடன் 56 ஆண்டுகள் ஒன்றாக இருந்தேன். காலையில் எழுவது முதல் இரவு அவர் தூங்க செல்லும் வரை நான் அவருடனேயே இருந்துள்ளேன்.
கூட்டம் பாதியிலேயே முடிப்பு
துரை துரை என என்னை அன்பாக அழைப்பார். துரை நான் தூங்க போகட்டுமா என்று என்னிடம் கேட்பார் என்று சொல்லும் போதே துரைமுருகன் கண்கலங்கி கதறினார். அவரை நிர்வாகிகள் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். துரைமுருகன் அழுகையால் இரங்கல் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
கன்னத்தை வருடி திருஷ்டி
கருணாநிதி உயிருடன் இருந்தபோது அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அப்போது அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டதை பார்த்த துரைமுருகன் அவரது கன்னத்தை வருடி திருஷ்டி கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.