தமிழகத்தில் எபோலா நோய் பாதிப்பு இல்லை: அரசு விளக்கம் - தேனி வாலிபர் டிஸ்சார்ஜ்!
சென்னை: தமிழகத்தில் எபோலா நோயின் பாதிப்பு இல்லை என்று தமிழக அரசின் சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் எபோலா அறிகுறிகளுடன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேனி மாவட்ட வாலிபர் பார்த்திபனும் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
அவரை 21 நாட்களுக்கு கண்காணிக்குமாறு தேனி அரசு மருத்துவமனைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பார்த்திபன் தேனி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சரிவர தடுப்பு மற்றும் நோய் குணமாக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நோயான எபோலா உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்க்கு இதுவரை 2000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நோய்க்கு எதிராக உலக சுகாதார அமைப்பு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்நோயை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், நைஜீரியாவிலிருந்து சென்னை வந்த வாலிபருக்கு எபோலா வைரஸ் நோய் இருப்பது கண்டறியப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
தேனி மாவட்டம் சிலுக்குவார் பட்டியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்ற 26 வயது வாலிபர். இவர் நைஜீரியாவிலிருந்து நேற்று தமிழகம் திம்பினார். அப்போது அவருக்கு எபோலா நோய்க்கான அறிகுறிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எபோலா இல்லை - அரசு
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த பயணி, எபோலா குறித்த சோதனைக்காக மட்டுமே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பப்புவா நியூகினியாவில் இருந்து நாடு திரும்பிய அவர் அந்நோய் பரவி உள்ள பகுதியில் இருந்து 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இருந்து தான் வந்துள்ளார் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தனி வார்டில் சிகிச்சை
எனினும் எபோலா நோய் பரவாவண்ணம் தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் பார்த்திபனுக்கென தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் மற்றொரு தகவல் வெனியாகின.
ஆனால் பாதுகாப்பு வசதிகள் இல்லை
அதேசமயம் எபோலா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வரும் பார்த்திபன் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் பணியில் இருக்கும் மருத்துவ ஊழியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இல்லை என்று தகவல்கள் வெளியாகின. எபோலோ வைரஸ் தாக்கப்பட்டவர் அருகில் செல்லும் போது கண் உட்பட உடல் மொத்தமும் மறைக்கும் ஆடை அணிந்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது அது சம்பந்தமான மருத்துவ ஆய்வுக் குறிப்புகளில். ஆனால், சென்னையில் தற்போது சிகிச்சை அளித்து வரும் மருத்துவக்குழு அந்த வசதிகளோடு இருப்பதாய்த் தெரியவில்லை என்று கூறப்பட்டது.
திடீர் டிஸ்சார்ஜ்
இந்த நிலையில் தற்போது பார்த்திபன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரது ரத்தப் பரிசோதனையில் எபோலா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்ததால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், 21 நாட்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருமாறு தேனி மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு போயுள்ளதாம்.