சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்கக் கூடாது: தேர்தல் ஆணையம் உத்தரவு
சென்னை: தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்துக்கு சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு ஆட்களை லாரி, வேன் மற்றும் பஸ்களில் ஏற்றிச்செல்வதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனுக்கு தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலர் தபஸ் குமார் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அரசியல் கட்சியினர் நடத்தும் பிரசார பொதுக் கூட்டங்களுக்கு பள்ளி பேருந்துகள், லாரி போன்ற சரக்கு வாகனங்களில் அரசியல் ஆள்கள் அழைத்து வரப்படுவதாகப் புகார்கள் வரப்பெற்றுள்ளன. இதுபோன்ற செயல்கள் மிகவும் அபாயகரமானவை.
இந்தச் செயல்களால் காப்பீடுகள்கூட இல்லாத விலை மதிப்புமிக்க உயிர்களுக்கு அபாயம் நேரக் கூடும். இதுபோன்ற தருணங்களில் மோட்டார் வாகனச் சட்டம்-விதிகளை கடுமையான முறையில் நடைமுறைப்படுத்துவதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்.
எனவே தமிழ்நாட்டில் மோட்டார் வாகன சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி பள்ளிக்கூட பஸ்கள் மற்றும் லாரிகளில் ஆட்களை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு ஏற்றிச்செல்ல தடை விதிக்கப்படுகிறது. பொதுப் போக்குவரத்து வாகனங்களை, போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்ட தடங்களில் மட்டுமே இயக்க வேண்டும்.
லாரி போன்ற சரக்கு வாகனங்களில் பொதுக் கூட்டங்களுக்கு ஆள்களை ஏற்றிச் செல்வது முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இந்தக் கடிதத்தின் மீது உரிய உத்தரவைகளை தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும். இதுதொடர்பான நடவடிக்கை அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.