இரட்டை இலைக்கு லஞ்சம் - டிடிவி தினகரன் டெல்லியில் இன்று கைது?
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த புகாரில் விசாரணைக்கு ஆஜராக டி.டி.வி.தினகரன் டெல்லி சென்றுள்ளார். அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னம்பெற 50 கோடி ரூபாய் லஞ்சம் தர பேரம் பேசிய புகாரில் டெல்லி போலீஸ் முன்பு டிடிவி தினகரன் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்றுள்ள தினகரன் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிளவு பட்டுள்ளன. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்திருந்தாலும் அதிமுக தொண்டர்களுக்கு இரட்டை இலைதான் அடையாளம். தேர்தலின் போது வாக்குகள் இரட்டை இலை வைத்திருப்பவர்களுக்குத்தான் கிடைக்கும்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது இரு அணிகளும் கட்சியின் சின்னத்திற்கு உரிமை கொண்டாடியதை அடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
இடைத்தரகர் கைது
தேர்தல் ஆணையத்தில் இந்த விவகாரம் விசாரணையில் உள்ள நிலையில் கடந்த 17ஆம் தேதியன்று பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லியில் ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ1.30 கோடி ரொக்கத்தையும் கைப்பற்றினர்.
டிடிவி தினகரன் முதல் குற்றவாளி
இதையடுத்து, போலீசாரின் விசாரணையில், இரட்டை இலை சின்னத்தை மீட்க ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதில் முன் பணமாக ரூ1.30 கோடியை டிடிவி தினகரன் கொடுத்ததாகவும் சுகேஷ் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தினகரனுக்கு சம்மன்
மேலும், சுகேஷ் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் முடிவு செய்தனர். இதற்காக, கடந்த 19ம் தேதி இரவு உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத் மற்றும் இன்ஸ்பெக்டர் நரேந்திர ஷெகால் ஆகியோர் சென்னை வந்து அடையார் வீட்டில் தங்கியிருந்த தினகரனிடம் நேரில் சம்மன் வழங்கினர். விசாரணைக்காக சனிக்கிழமையன்று டெல்லி போலீசார் முன்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
டெல்லி பயணம்
இதனிடையே, தன்மீது வேறு சில வழக்குகள் இருப்பதாகவும், அவற்றின் விசாரணையை சந்தித்து வருவதால், இந்த வழக்கில் நேரில் ஆஜராக 3 நாள் கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால், அவரது கோரிக்கையை டெல்லி போலீசார் ஏற்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து இன்று காலை டி.டி.வி.தினகரன் டெல்லி புறப்பட்டு சென்றார்.
கைதாக வாய்ப்பு
டெல்லியில் போலீசாரின் கேள்விகளுக்கு தினகரன் அளிக்கும் பதில்கள் திருப்தி அளிக்காதபட்சத்தில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. டெல்லி சென்ற தினகரன் திரும்புவாரா? திகாரில் அடைக்கப்படுவாரா? இன்று மாலைக்குள் தெரிந்து விடும்.