வாக்காளர்களுக்கு பணம்... தமிழக வரலாற்றில் முதல் முறையாக சிக்கி 'முதல்வர் எடப்பாடி' சாதனை!
தமிழக வரலாற்றிலேயே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகாரில் வழக்கை சந்திக்கும் முதலாவது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி சரித்திரம் படைத்துவிட்டார்.
சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் வழக்கை சந்தித்து 'சரித்திரம்' படைத்திருக்கிறார்.
ஆர்கே நகர் தொகுதியில் முதல்வர் பதவி கனவுடன் டிடிவி தினகரன் போட்டியிட்டு பணத்தை வாரி இறைத்தார். அங்கிங்கெனாதபடி அத்தனை நூதன வழிகளிலும் பணம் பாதாளம் வரை பாய்ந்தது.
தேர்தல் ஆணையத்தின் அத்தனை கண்காணிப்புகளையும் மீறி தினகரன் கோஷ்டியின் 'கவனிப்பு' அமர்க்களமாக இருந்தது. எதிர்க்கட்சிகள் கூப்பாடு போட்டு பார்த்தும் தினகரன் கோஷ்டியின் விஸ்வரூபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
இதன் உச்சமாக தினகரனின் தளபதியாக ஆர்கே நகர் தொகுதியில் வலம் வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆர்கே நகர் தொகுதியில் ரூ89 கோடி பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின.
முதல்வர் பெயரும் லிஸ்ட்டில்
இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிய அமைச்சர்கள் அனைவரது பெயரும் இடம்பெற்றிருந்தது நாட்டையே அதிர வைத்தது. இதனால் ஆர்கே நகர் இடைத் தேர்தலே ரத்து செய்யப்பட்டது.
ஆர்டிஐ மூலம் கேள்வி
இதன்பின்னர் ஆர்கே நகர் பணப்பட்டுவாடா விவகாரம் அமுங்கிப் போனது. இந்நிலையில் ஆர்கே நகர் பணப்பட்டுவாடா விவகாரத்தில் என்னதான் நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சென்னையைச் சேர்ந்த வைரக்கண்ணு கேள்வி கேட்டிருந்தார்.
முதல்வர் மீது வழக்கு
இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், டிடிவி தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளோம் என அதிரடி தகவலை தெரிவித்தது. இப்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும்கூட முதல்வர் எடப்பாடி உள்ளிட்டோர் மீது இன்னமும் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை.
ஹைகோர்ட்டில் வழக்கு
தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் கடிதத்தை ஆதாரமாக வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை நாளை நடைபெற உள்ளது.
சரித்திரம்தான்
தமிழகம் ஓராண்டில் 3 முதல்வர்களை சந்தித்துவிட்டது; மேலும் 2 முதல்வர் கனவான்களை பார்த்து சரித்திரம் படைத்திருக்கிறது. இப்போது தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வழக்கை வாங்கி முதல்வர் பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றொரு சரித்திர சாதனை படைத்துவிட்டார்!
ஓராண்டு சாதனைகள் நூறாண்டுகள் பேசட்டும்!