வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள் இல்லை - பள்ளிக்கு பூட்டு போட்ட தேர்தல் அதிகாரிகள்
நெல்லை: தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி சாய்வு தளம் அமைக்காததால் இரண்டு பள்ளிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் பூட்டு போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் அருகில் உள்ள தேவாலயத்தில் பாடம் படித்து வருகின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெறுவதை ஓட்டி வாக்குபதிவு மையங்களில் மாற்று திறனாளிகளுக்கு வசதியாக சாய்வுதளம் அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாளையங்கோட்டை சாந்தி நகர் மணி கூண்டு அருகே சிஎஸ்ஐககு சொந்தமான பிரைமரி நர்சரி பள்ளியும், டிடிடிஏ துவக்கப்பள்ளியும் உள்ளது. பிரைமரி பள்ளியில் 210 மாணவர்களும், டிடிடிஏ பள்லியில் 150 மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர்.
பாளையஙகோட்டை சட்டசபைத் தொகுதி தேர்தல் அலுவலரான மாநகராட்சி அலுவலர் சிவசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் வசந்தராஜூ உள்ளிட்ட அலுவலர்கள் இந்த இரண்டு பள்ளிகளிலும் வாக்கு பதிவுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது பிரைமரி நர்சரி பள்ளியில் மாற்று திறனாளிகளுக்கு வசதியாக சாய்வு தளம் அமைக்கப்படாமல் இருந்தது.
இதையடுத்து அவர்கள் அங்கு சாய்வு தளம் அமைக்க உத்தரவிட்டனர். மேலும் இரு பள்ளிகளுக்கும் ஓரே கழிவறை தான் உள்ளதால் அந்த வசதியையும் மேம்படுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் சொன்ன பிறகும் பள்ளி நிர்வாகம் அக்கறை காட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பள்ளிக்கு மீண்டும் வந்த அதிகாரிகள் இரண்டு பள்ளிகளையும் பூட்டி சாவியை எடுத்து சென்றனர். இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் வெளியே காத்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆலய நிர்வாகிகள் அருகில் உள்ள தேவாலயத்தில் திறந்து விட்டு பாடம் படிக்க ஏற்பாடு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.