காஞ்சிபுரம் அதிமுக பேனர் விவகாரம்... அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
காஞ்சிபுரம்: தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே வெற்றி பெற்றதாக சுவரொட்டி ஒட்டிய காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மரகதம் குமரவேலின் செயல் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, அம்மாவட்ட கலெக்டருக்கு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தலில் இன்னும் முடிவுகள் அறிவிக்கப் படவில்லை. இந்நிலையில், நேற்று காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்று விட்டதாக குறிப்பிட்ட வாக்கு வித்தியாசத்தைக் குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது.
அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியின் எம்.பியும், தற்போதைய காங்கிரஸ் வேட்பாளருமான விசுவநாதன் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், "தமிழக அமைச்சர் சின்னய்யாவின் ஆதரவில் காஞ்சியில் உள்ளூர் அ.தி.மு.க.வைச்சேர்ந்த பரிமளம் என்பவரால் நகர் முழுவதும் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில், காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மரகதம் குமரவேல் நடந்து முடிந்த தேர்தலில் 1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்து இன்னும் வாக்குகள் எண்ணப்படாத நிலையில் முன்கூட்டியே தவறான தகவலை இவ்வாறு சுவரொட்டி மூலம் தெரியப்படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது என்பதோடு இது முற்றிலும் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானதாகும். எனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அ.தி.மு.க வேட்பாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் "எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் விசுவநாதனின் இந்த புகார் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரவீன்குமார் கூறுகையில், " வாக்கு எண்ணுவதற்கு முன்னதாகவே வெற்றி போஸ்டர் வைத்த விவகாரத்தில் காஞ்சிபுரம் அ.தி.மு.க வேட்பாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.