ஆய்வு, ஆலோசனை என மும்முரமாகும் ஆர்கே நகர் இடைத்தேர்தல் ஏற்பாடுகள்
ஆர்கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்கு பதிவு மையங்களை தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்கு பதிவு மையங்களையும் வாக்கு எண்ணும் இடங்களையும் காவல் துறையினருடன் பார்வையிட்டு தேர்தல் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வாக்குப் பதிவு நடைபெற இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் அங்கு இரு தினங்களாக ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சியினர் பணப்பட்டுவாடா புகாரை கூறி வந்தனர்.
புகார்
தேர்தல் அதிகாரிகளும் அவ்வப்போது ரொக்கத்தை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களை போலீஸில் ஒப்படைத்து வந்தனர். பணவிநியோகம் அதிகரித்துள்ளதாக திமுக, பாஜக ஆகியன புகார் கூறியதாலும் ஊடகங்களும் வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டதால் தேர்தல் ரத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திட்டமிட்டபடி தேர்தல்
இதனிடையே பணப்புகார்கள் வந்தாலும் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும் புகாருக்குள்ளான போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனிடையே 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு வாக்கு பதிவு மையங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
போலீஸ் அதிகாரிகள்
ஆர்கே நகருக்குள்பட்ட வாக்கு சாவடிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், சென்னை காவல் துறை ஆணையர் விஸ்வநாதனுடன் ஆய்வு செய்தார். அப்போது வாக்குச் சாவடியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள்
வரும் 21-ஆம் தேதி நடைபெறும் இந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பூத்துக்குள் ஏஜென்ட்களுக்கான இடம், வாக்கு பதிவு முடிந்தவுடன் வாக்கு பதிவு இயந்திரங்களும் வைக்கப்படும் இடம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். துணை ராணுவத்தினர் இந்த தேர்தல் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.