ஸ்கூட்டி வாங்க 50% மானியம்- அம்மா டூவீலர் திட்டம்- முதல்வரின் முதல் கையெழுத்து!
முதல்வராக இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா நாற்காலியில் அமர்ந்து மகப்பேறு உதவி உயர்வு, ஸ்கூட்டி வாங்க மானியம் போன்ற 5 முக்கிய பைல்களில் கையெழுத்து போட்டுள்ளார்.
சென்னை: தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல்வராக முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். ஜெயலலிதா அறையில் அவரது நாற்காலியில் அமர்ந்து பச்சை நிற பேனாவில் 5 பைல்களில் கையெழுத்து போட்டுள்ளார். முக்கியமாக பெண்கள் ஸ்கூட்டி வாங்க 50 சதவிகித மானியத்திற்கு முதல் கையெழுத்து போட்டார்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு டிசம்பர் 5ஆம் தேதியன்று நள்ளிரவில் முதல்வராக பொறுப்பேற்றார் ஓ.பன்னீர் செல்வம். 62 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்த அவர், தனது பதவியை பிப்ரவரி 5ஆம் தேதி ராஜினாமா செய்தார்.
முதல்வராக பொறுப்பேற்பு
சட்டசபைக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றதை அடுத்து சட்டசபை குழு தலைவராக சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து முதல்வராக கடந்த வியாழக்கிழமை பதவியேற்றார்.
ஜெயலலிதா அறையில் பொறுப்பேற்பு
சனிக்கிழமையன்று சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி, இன்று முதல்வராக ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் அமர்ந்து முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
முதல் கையெழுத்து
ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியில் அமர்ந்து பச்சை நிற பேனாவில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்து போட்டார். முதல் கையெழுத்தாக உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க 50 சதவிகிதம் மானியம் அளிக்கும் திட்டத்தில் கையெழுத்து போட்டார். இந்த திட்டத்திற்கு அம்மா இரு சக்கர வாகனத்திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
பச்சை பேனாவில் 5 கையெழுத்து
தொடர்ந்து மேலும் 500 மதுக்கடைகள் மூடல், மகப்பேறு நிதியுதவித்திட்டம் 18000 ரூபாயாக உயர்வு, மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் திட்டம், வேலை வாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை இரு மடங்காக உயர்வு ஆகிய 5 பைல்களில் கையெழுத்து போட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.