மெரீனாவுக்கு எடப்பாடி விசிட்.. ஜெ. சமாதியில் அஞ்சலி
தமிழக சட்டசபையில் காவல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் முடிவடைந்தவுடன் மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார்.
சென்னை: தமிழக சட்டசபையில் காவல் துறை மீதான மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி, வரும் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் தினந்தோறும் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்றும், இன்றும் காவல் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றன. அப்போது தமிழக காவல் துறைக்கு 45 வகையான திட்டங்களையும், தீயணைப்பு துறையினருக்கு 9 வகையான திட்டங்களையும் முதல்வர் அறிவித்தார்.
இது முடிவடைந்த பின்னர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். வழக்கமாக ஜெயலலிதா இருந்த வரை காவல் துறை மானியக் கோரிக்கைகளுக்கு அவர் பதிலளிப்பதே வழக்கமாக இருந்த நிலையில், முதல் முறையாக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.