வேட்பாளர்கள் செலவைக் கண்காணிக்க 3 பார்வையாளர்கள்... டிசம்பர் 7ல் சென்னை வருகை!
வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க 3 செலவினப் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்களைப் பார்வையிடுவதற்காக 3 செலவினப் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
சென்னை ராதாகிருஷ்ணன் நகருக்கு டிசம்பர் 21ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இது வரை பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் தேர்வில் இழுபறி நிலை நீடிக்கிறது.
விருப்ப மனுக்களைப் பெற்று அதன் அடிப்படையில் நாளை வேட்பாளரை இறுதி செய்ய அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது. இந்நிலையில் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் முடிந்த கையோடு பிரச்சாரமும் தொடங்கிவிடும். எனவே வேட்பாளர்களின் செலவுகளை பார்வையிடுவதற்காக தேர்தல் ஆணையம் 3 செலவினப் பார்வையாளர்களை நியமித்துள்ளது.
வெளிமாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான குமார் பிரனவ், ஷீல் அஷீஷ், ஜகோரியா உள்ளிட்ட 3 அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவர்கள் 3 பேரும் டிசம்பர் 7ம் தேதி சென்னை வருகின்றனர். அதன் பின்னர் இவர்கள் வேட்பாளர்களின் செலவுகள் தொடர்பாக தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது.