7 லாரிகளில் 5 கோடி ரூபாய் சில்லறை - வங்கிக்கு கொண்டு சென்றபோது பறிமுதல்
திருவள்ளூர்: லோக்சபா தேர்தலை ஒட்டி மேற்கொள்ளப்படும் வாகன சோதனையில் 7 கன்டெய்னர் லாரிகளில் கொண்டுவரப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள சில்லரை நாணயங்கள் சிக்கின.
கன்டெய்னர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட ஐந்து கோடி ரூபாய் சில்லரை நாணயங்கள் குறித்து தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
பொன்னேரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அதிகாரி லட்சுமணன் தலைமையில் நல்லுார் சுங்கச் சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அடுத்தடுத்து வரிசையாக சென்னை நோக்கி சென்ற ஏழு கன்டெய்னர் லாரிகளை மடக்கினர். அவை பூட்டப்பட்டு "சீல்" வைக்கப்பட்டிருந்தன. வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அவை கொல்கத்தாவில் இருந்து வருவதாக தெரிவித்தனர்.
தொடர் விசாரணையில் லாரிகளில் ஐந்து கோடி ரூபாய் சில்லரை நாணயங்கள் இருப்பதாகவும், அதனை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் கூறினர்.
போதிய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஆவணங்கள் இல்லாததால் உரிய ஆவணங்களை காண்பித்துவிட்டு எடுத்து செல்லும்படி அறிவுறுத்தபட்டது.
அதை தொடர்ந்து ஏழு கன்டெய்னர் வாகனங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விரைந்து சென்று உரிய ஆவணங்களை காண்பித்தனர். அதன்பின் வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.