இரட்டை இலை சின்னத்தை மீட்க மும்முரம்.. அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் டெல்லி புறப்பட்ட அதிமுக குழு
இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அமைச்சர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் டெல்லி புறப்பட்டுள்ளனர்.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அதிமுகவின் எடப்பாடி அணியினரும், ஓபிஎஸ் அணியினரும் டெல்லிக்கு புறப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்தது. இதைத் தொடர்ந்து ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனுதாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 23-ஆம் தேதி அதிமுக சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
சுயேட்சை சின்னங்கள்
இதனால் இரு அணிகளும் அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்ற பெயரில் தொப்பி, இரட்டை விளக்கு சின்னத்தில் போட்டியிட்டனர். எனினும் அந்த இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தை
இந்நிலையில் சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற
ஓபிஎஸ் அணியின் நிபந்தனையை ஏற்று அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 12-ஆம் தேதி அதிமுகவின் பொதுக் குழு கூட்டப்பட்டது.
சசிகலா நீக்கம்
அந்தக் கூட்டத்தில் சசிகலாவின் பொதுச் செயலர் பதவி ரத்து செய்யப்பட்டும் தினகரனுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க இரு அணிகளும் முடிவு செய்தன.
டெல்லி பயணம்
அதன்படி இன்று அமைச்சர் ஜெயக்குமார், கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் இன்றோ அல்லது நாளையோ தேர்தல் ஆணையரை சந்தித்து இரட்டை இலை சின்னத்தை மீட்க கோருவர். இதற்காக பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மொழிபெயர்ப்பு செய்து கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் பொதுக் குழு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரி டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.