ஜெயலலிதாவின் எஃகு கோட்டை ஈரோடு... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்!
ஈரோடு மாவட்டம் ஜெயலலிதாவின் எஃகு கோட்டை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு: அரசு மருத்துவமனை அருகே புதிதாக ரூ.58.54 கோடி செலவில் மேம்பாலம் கட்டடப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்லை நாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு மாவட்டம் ஜெயலலிதாவின் எஃகு கோட்டை என்றார்.
இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கருப்பண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தினகரன் ஆதரவாளர் ஆன பெருந்துறை சட்டசபை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் மேம்பாலப் பணிக்கான அடிக்கல்நாட்டு விழாவில் பங்கேற்கவில்லை.
இதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசினார்.
ஜெ.வின் எஃகு கோட்டை
அப்போது ஈரோடு மாவட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஃகு கோட்டை என்றார். ஈரோட்டில் தொழிற்சாலைகளும், கைத்தறி மற்றும் விசைத்தறி ஆலைகளும் நாளுக்கு நாள் பெருகி வருவதாக கூறினார்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர்..
குடிநீர் பிரச்சனையை போக்கும் வகையில் ரூ.484 கோடி செலவில் திட்டங்கள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஈரோடு மக்களுக்கு கிடைக்கும் என்றார்.
குறைந்த விலையில் மக்கள்
மேலும் பேசிய அவர் மணல் குவாரிகளை ஒழுங்கு முறைப்படுத்தி குறைந்த விலையில் மக்களுக்கு மணல் வழங்கப்படும் என்றார். மொடக்குறிச்சியில் பேருந்து நிலையம், கொபியில் புறவழிச்சாலை அமைக்க பரிசீலனை செய்யப்படும் என்றார்.
இல்லம் தேடி மணல் வரும்
மேலும் புதிதாக ஈரோட்டில் கட்டப்பட உள்ள மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றார். மணல் குவாரிகளை அரசு ஏற்று நடத்துவதால் ஒரு வாரத்திற்குள் இல்லம் தேடி மணல் வரும் என்றார். 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அனைத்து அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்ற மாவட்டம் ஈரோடு என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்.