வானில் இன்று ரெண்டு “நிலா”- புரளிச் செய்தியை நம்பவேண்டாம்- தமிழ்நாடு அறிவியல் கழகம்!
சென்னை: வானில் இன்று இரவு 2 நிலா தெரியும் எனவும், செவ்வாய் கிரகம் மிக பெரிதாக தெரியும் எனவும் வலைதளத்தில் உலாவரும் செய்திகள் புரளிதான் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியுள்ளார்.
வானில் இன்று இரவு 2 நிலா தெரியும் என வலைதளத்தில் புரளி பரவி வருகிறது.
இதுதொடர்பாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் புகைப்படங்களும் வெளிவந்துள்ளன.
இரண்டு நிலா கட்டுக்கதை:
இவை வெறும் புரளிதான். இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். செவ்வாயும், பூமியும் சூரியனை மையமாக வைத்து நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன.
சுற்றி வரும் கிரகங்கள்:
இவ்வாறு ஒவ்வொரு கிரகங்களும் தன் பாதையில் சுற்றி வரும்போது, அவற்றிற்கு இடையே தொலைவு மாறி மாறி அமையும். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையேயான சராசரி தொலைவு 22.5 கோடி கிலோ மீட்டர் ஆகும்.
கூடிக் குறையும் தொலைவு:
மேலும், கிரகங்கள் சுற்றும் பாதை எப்போதும் ஒரேமாதிரி இருக்காது. நீள்வட்ட பாதையில் உள்ள தடுமாற்றங்கள் காரணமாக ஒவ்வொரு முறையும் அருகாமையில் வரும்போதும் பூமி, செவ்வாய் தொலைவு சற்றே கூடி குறையும்.
5.5 கோடி கிலோ மீட்டர்:
கடந்த 2003 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27 ஆம் தேதி பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொலைவு 5.5 கோடி கிலோ மீட்டராக இருந்தது. இதுதான் கடந்த 6 ஆயிரம் ஆண்டுகளில் மிக குறைவான தொலைவாக இருந்தது.
ஒளிப்புள்ளியாக தெரியும்:
அதுபோல 2 கிரகங்களும் மிக அருகே வரும் நிலை மறுபடியும் 2287 ஆம் ஆண்டில் தான் ஏற்படும். எனினும், இந்த நாட்களிலும் வெறும் கண்களுக்கு ஒளி புள்ளியாகத்தான் செவ்வாய் தென்படும். எனவே அறிவியல் பூர்வமற்ற விஷயங்களை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.