விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு- முடங்கியது தமிழகம்- மறியலில் ஈடுபட்ட 8,000 பேர் கைது!
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று மாபெரும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தால் ஒட்டுமொத்தமாக தமிழகமே முடங்கியது.
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் இன்று நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 8,000 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
வறட்சி நிவாரண தொகை அதிகரிப்பு, தேசிய வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஆனால் இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
இதனிடையே விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதிமுக, பாஜக, தமாகா, பாமக தவிர பெரும்பாலான அரசியல் கட்சிகள், வர்த்தகர் சங்கங்கள், ஓட்டல்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தன.
கடைகள் மூடல்
இன்று காலை 6 மணி முதல் மாலை வரை இந்த முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. நகரங்களிலும் கிராமங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை. ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
காய்கறி சந்தைகள் மூடல்
சென்னை காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டும் மூடப்பட்டது. கோயம்பேடு மற்றும் ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கான காய்கறி வரத்து நிறுத்தப்பட்டன. அதேபோல் வெளிமாநிலங்களுக்கும் காய்கறிகள் கொண்டு செல்லப்படவில்லை.
அரசுப் பேருந்துகள் இயக்கம்
அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் கணிசமான அளவில் இயக்கப்பட்டன. மேலும் ரயில் போக்குவரத்திலும் எந்த பாதிப்பும் இல்லை. சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும் வழக்கம் போல் நடைபெற்றது.
திரை உலகம் ஆதரவு
இப்போராட்டத்துக்கு ஆதரவாக திரை உலகமும் ஆதரவு தெரிவித்தது. திரையரங்குகளில் பகல்நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. படப்பிடிப்புகளும் இன்று ரத்து செய்யப்பட்டிருந்தன.
போலீஸ் குவிப்பு
இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சென்னையில் மட்டும் 15,000 போலீசார் குவிக்கப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் மறியல்
முழு அடைப்புப் போராட்டத்தின் போது சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த மறியல் போராட்டங்களில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 8,000-க்கும் அதிகமானோர் இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதாகினர். பின்னர் இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.