காயும் காவிரி டெல்டா... மாண்டுபோகும் விவசாயிகள்.. இழப்பீடு கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்!
டெல்டா பகுதியில் வறட்சி ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று சிபிம் கோரியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து வறட்சி நிலவி வருவதால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்தப் ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் ஜி. ராமகிருஷ்ணன் பேசியதாவது:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி முற்றாக இல்லை. சம்பா சாகுபடி கருகிவிட்டது. மேலும் விவசாயிகள் தற்கொலைகள், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் என இறப்பு எண்ணிக்கை என்பது 40தை எட்டிவிட்டது. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் சிபிஎம் சார்பில் தொடர் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், வறட்சியால் அதிர்ச்சியுற்று இறந்த விவசாயிகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும், தலா 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக தமிழக அரசு வழங்க வேண்டும். நெல் சாகுபடி பொய்த்துப் போன நிலையில் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டவிவசாயிகளின் நலனை வலியுறுத்தித்தான் இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
தமிழக அரசு விவசாயிகளின் தற்கொலைகள், வறட்சிப் பற்றி பேசுவதில்லை. நிவாரணம் பற்றி வாய் திறப்பதில்லை என்று ஜி, ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.