நீலகிரி தேயிலைத் தோட்டத்தில் பெண் புலி சடலம் - விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா?
நீலகிரி: கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த புலியின் சடலம் மீட்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகேயுள்ள சோலூர் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டம் ஒன்றில், நேற்று மாலையில் புலி ஒன்று இறந்து கிடைப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாவட்ட வனத்துறை அதிகாரிகள், 8 வயது மதிக்கத்தக்க பெண் புலியின் சடலத்தைக் கைப்பற்றினர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் புலியின் உடலை அங்கேயே வைத்து பிரேத பரிசோதனை நடத்தினர். பிறகு அதே பகுதியில் புலியின் உடல் எரியூட்டப்பட்டது.
பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்பு தான் புலி விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது வனவிலங்கு களுக்கு இடையேயான மோதலில் இறந்ததா என்று தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை மர்மமான முறையில் இறந்த வனவிலங்குகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தொடர்பாக வனத்துறையினர் எந்த தகவலும் தெரிவிப்பது இல்லை என்பது குறிப்பிட்ட தக்கது.