"நாடகம் விடும் நேரம் தான் உச்ச காட்சி நடக்குதம்மா"... ஆர்கே நகர் மக்கள் தீர்ப்பின் அர்த்தம் இதுதானா?
அதிமுகவில் இதுவரை நடந்து வந்த நாடகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தான் ஆர்கே நகரில் மக்கள் தினகரனுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளனரா என்று எண்ணத் தோன்றுகிறது.
Recommended Video
சென்னை : அதிமுகவில் நடைபெற்ற நாடகங்கள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி ஆர்கே நகரில் டிடிவி. தினகரனை மாபெரும் வெற்றியடையச் செய்துள்ளனர். இது தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பாஜகவோடு கைகோர்த்து செயல்பட்ட முதல்வர் பழனிசாமிக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
அதிமுகவின் நிலை என்னவாகும், தலைமை இல்லாமல் திண்டாடும் கட்சி. மாநில சுயாட்சி கவுரவத்தை விட்டுவிட்டு மத்திய பாஜக அரசின் பேச்சை கேட்டு செயல்படும் அரசாக அதிமுக அரசு மாறிவிட்டது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் கட்சிகளால் சொல்லப்படுகிறதா அல்லது மக்களின் மனநிலையும் அது தானா என்பதற்கான பலப்பரிட்சையாகவே ஆர்கே நகர் தேர்தலானது பார்க்கப்பட்டது.
அதிமுக இணைந்துவிட்டது, இருகுழல் துப்பாக்கி ஒன்றாகிவிட்டது என்றெல்லாம் மக்களை நம்ப வைக்கும் படியாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணியினர் பேசி வந்தனர். ஆனால் இவர்களின் பேச்சுகள் எல்லாம் நம்பும்படியானதாக இல்லை என்பதைத் தான் ஆர்கே நகர் மக்கள் புரிய வைத்துள்ளனரா என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஓ.பிஎஸ்ஸின் குறுகிய கால அரசியல்
அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பம் ஒழிக்கப்பட வேண்டும் என்று தர்மயுத்தம் தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். இதனால் அவருக்கு அதிமுகவினரின் ஆதரவு அதிக அளவில் கிடைத்தது. ஆனால் நல்ல ஓபனிங் கொடுத்தவரிடம் ஃபினிஷிங் இல்லாமல் போய்விட்டது குறுகிய கால அரசியல் பலனாக துணை முதல்வர் பதவி, தங்கள் அணியைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி என்ற உடன்படுக்கையோடு அணி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன்படுக்கை
முதல்வர் பதவி வாங்குவதற்காக சசிகலாவிடம் நல்ல பெயர் வாங்கிய பழனிசாமி, பதவிக்கு வந்ததும் பாஜக பேச்சை கேட்டு சசிகலாவை எதிர்த்து வேலை பார்க்கத் தொடங்கினார். சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஓரம் கட்டிய கையோடு கட்சிக்கு தலைமை ஓ.பன்னீர்செல்வம், ஆட்சிக்கு தலைமை தான் என்ற டீலிங்கோடு தற்போது கட்சியும் ஆட்சியும் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஜெ. மரண குற்றச்சாட்டு
இடையில் அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்று கிளம்பிய புகைக்கல்களும் கூட எப்படியோ பெரிதாகாமல் அடங்கி விட்டது. தாங்கள் தான் உண்மையான அதிமுக என்று மக்களை நம்ப வைக்க இவர்களிடம் எந்த வலுவான காரணமும் இல்லை. இவர்கள் வசம் இருந்த ஒரே ஒரு குற்றச்சாட்டு ஜெயலலிதா மரண மர்மம்.
வீடியோ மூலம் தெளிவு
ஆனால் அதற்கும் வேட்டு வைக்கும் விதமாக வாக்குப்பதிவு நாளன்று முன்தினம் ஜெயலலிதா மருத்துவமனையில் பழச்சாறு அருந்தும் வீடியோவை தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தினகரனின் அதிரடி அதிமுகவில் அரங்கேறி வந்த நாடகங்களுக்கு ஏற்ப இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.
அதிமுகவிற்கான தீர்க்கத்தரிசன பாட்டு
"நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா, வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும், வேளை நெருங்கதம்மா, பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா". எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்ட இந்தப் பாடல் வரிகள் தற்போது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ அதிமுகவிற்கு நன்றாக பொருந்தும்.