ஃபைன் ஃபியூச்சர் நிதி நிறுவன மோசடி: இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை: கோவை பைன் பியூட்சர் நிதி நிறுவன மோசடி வழக்கில் 7ஆயிரம் பக்கங்கள் கொண்ட இரண்டாவது குற்றப்பத்திரிகை கோவை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
பைன் பியூச்சர் நிதிநிறுவனம் கோவை பீளமேட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. இதன் நிர்வாக இயக்குனர்களாக செயல்பட்டு வந்த விவேக், செந்தில்குமார் ஆகியோர், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குவதாகவும், ஆண்டு இறுதியில் முதலீட்டு தொகையை திரும்ப வழங்குவதாகவும் கவர்ச்சிகர விளம்பரங்களை வெளியிட்டனர்.
இதை உண்மை என நம்பிய முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர். கோவை, திருப்பூர், அன்னூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பைன் பியூச்சர் நிறுவனத்தில் 818 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர்.
பலநூறு கோடி ரூபாய் பணம் சேர்ந்த உடன் நிறுவனத்தை மூடிவிட்டு பைன்பியூச்சர் நிறுவன இயக்குனர்கள் 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து முதலீட்டாளர்கள் கோவை மாவட்ட குற்றப்பிரிவுபோலீசில் புகார் செய்தனர் கோவை மாட்ட குற்றப்பிரிவில் இருந்த வழக்கு கோவை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து தலைமறைவானவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. பைன் பியூச்சர் இயக்குனர்கள் செந்தில்குமார் , விவேக் ஆகியோர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பதுங்கியிருந்த அறையில் சோதனை செய்தபோது ரூ.4 கோடி ரொக்க பணம், 1 1/2 கிலோ தங்கம் ஆகியவை சிக்கியது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணையில், 818 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது குற்றப்பத்திரிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் நிதி நிறுவனத்தின் உரிமையாளர் செந்தில்குமார், விவேக் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications