பல்லடம் நூற்பாலையில் தீவிபத்து... பிளாஸ்டிக்குகள் கருகியதால் புகை மூட்டம்
பல்லடம்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள நூற்பாலையில் உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் தீப்பிடித்து எரிந்ததால், அந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்கள் முழுவதிலும் கரும்புகை சூழ்ந்தது.
பல்லடத்தில் கள்ளகிணர் கிராமத்தில் உள்ள நூற்பாலையில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு நூல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சேகரிக்கப்பட்ட காலியான பிளாஸ்டிக் பொருள்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கப்புகள், பிளேட்டுகள் என ஒரு பகுதியில் குவிக்கப்பட்டிருந்தன.
ஒரு ஏக்கர் பரப்பில் குவிக்கப்பட்டுள்ள இந்த பிளாஸ்டிக் குவியல்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. தீ மளமளவென பரவியதால் பிளாஸ்டிக்குகள் முற்றிலுமாக எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களும் புகை மண்டலமாக காட்சியளித்தன.
இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நச்சுதன்மை கொண்ட பிளாஸ்டிக்குகள் தீப்பிடித்ததால் அதன் மூலம் நச்சுகள் வெளியாகி சுற்றுப்புறத்துக்கும், சுகாதாரத்துக்கும் சீர்கேடு விளைவிக்கக கூடும் என்று பீதி நிலவுகிறது.
இந்த தீ விபத்தால் யாருக்கும் ஆபத்து இல்லை. விபத்துக்கான காரணம் குறித்தும் சேத விபரங்கள் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.