தமிழக வரலாற்றில் இடைத்தேர்தலில் முதல் முறையாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சியை தோற்கடித்த சுயேச்சை!
தமிழக அரசியல் வரலாற்றில் இடைத்தேர்தலில் முதல் முறையாக ஆளும் கட்சியையும், எதிர்க்கட்சியையும் சுயேச்சை வேட்பாளர் தோற்கடித்துவிட்டார்.
Recommended Video
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இடைத்தேர்தலில் முதல் முறையாக ஆளும் கட்சியையும், எதிர்க்கட்சியையும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் முந்தி சென்று வெற்றி பெற்றுவிட்டார்.
ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு பிறகு மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் அமில சோதனையாகவே பார்க்கப்பட்டது.
மாறி மாறி குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் நடந்த அவலங்களை அதிமுகவும், அதிமுகவில் நடப்பதை திமுக, தினகரன் அணியினரும் மாறி மாறி மக்கள் முன்பு வைத்தனர். குற்றச்சாட்டுகளை முன்வைத்தே தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது. மேலும் நீட் தேர்வு, ஜெயலலிதா மரணம், குட்கா ஊழல், ஓகி புயல் உள்ளிட்டவை இந்த தேர்தலில் பிரதிபலித்தன.
வாக்கு எண்ணிக்கை
இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்தே தினகரன்தான் முன்னிலை வகித்து வந்தார். இந்த நிலை கடைசி வரை மாறவே இல்லை.
குக்கர் சின்னத்தில்...
சுமார் 19 சுற்றுகளாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில் தினகரன் 89,013 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரை குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டார். மதுசூதனனை காட்டிலும் 40707 வாக்குகள் அதிகம் பெற்று தினகரன் சாதனை பெற்றுவிட்டார்.
சுயேச்சை வேட்பாளர் வெற்றி
தினகரன் வெற்றி பெற்றதன் மூலம் இடைத்தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் என்ற சாதனையை படைத்துவிட்டார். அதேபோல் தமிழகத்தில் இடைத்தேர்தலில் முதல் முறையாக ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சியையும் தோற்கடித்த சுயேச்சை வேட்பாளர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்து விட்டது.