கர்நாடகத்தை கண்டித்து தமிழகத்தில் இன்று பந்த்: மீனவர்கள், நகை வியாபாரிகள் ஆதரவு
சென்னை: கர்நாடகத்தை கண்டித்து இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அகில இந்திய மீனவர்கள் சங்கம், தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், தமிழகத்துக்கு அதிகளவில் காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்தியும் இன்று தமிழகம் முழுவதும் பந்த் நடைபெறும் என்று அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்தார். இதற்கு அனைத்து வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து திமுக, மதிமுக, தேமுதிக, பாமக, தமாகா,மமக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை பி.ஆர். பாண்டியன் சந்தித்து ஆதரவு கோரினார். இன்று நடைபெறும் முழு அடைப்புக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இன்று நடைபெறும் பந்த்தில் அனைத்து கட்சியினரும் கலந்து கொள்வதால், அந்தந்த கட்சிகளை சேர்ந்த ஆட்டோ, சரக்கு வாகன ஓட்டுநர் சங்கங்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கமும் கலந்து கொள்கின்றன. இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு அகில இந்திய மீனவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காசிமேடு மீன்பிடி துறைமுகம் மூடப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
அதேபோல் முழு அடைப்பு போராட்டத்திற்கு தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமார் 35 ஆயிரம் நகைக்கடைகள் மூடப்படும் என சென்னை நகைக்கடைகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications